விஐபி பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி வாருங்கள்- வெங்கையா நாயுடு
திருப்பதி: முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பதிக்கு வந்தால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் அவர்கள் தரிசிக்க முடியும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வருகை தந்தார். அப்போது, அவருக்கு ஏழுமலையான் கோவிலின் வாசலில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேத பண்டிதர்கள்
தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற வெங்கையா நாயுடு ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் கோவிலில் உள்ள ரங்கநாயர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
அதிகரித்து வருகிறது
தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா நாயுடு, திருப்பதி மலைக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது.
வகுத்து கொள்ள வேண்டும்
எனவே, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வருடத்தில் ஒரு முறை மட்டுமே திருப்பதி மலைக்கு வரும் வகையில் தங்கள் பயண திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சாமி கும்பிடுவது
தான் குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மற்றவர்களுக்கும் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டுமே திருப்பதி மலைக்கு வருவதும், வரிசையில் சென்று சாமி கும்பிடுவதும் தன்னுடைய வழக்கம் என்று அவர் தெரிவித்தார்.
தாமதம்
இதேபோல் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். இது போல் விஐபிக்கள் அடிக்கடி திருப்பதிக்கு வருவதால் சாதாரண மக்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தேவையற்ற பதற்றங்களுக்கும் இது வழிவகுக்கிறது.