நகைக்கடையில் குரங்கு 'சுட்ட' ரூ.10 ஆயிரம் எந்த தெருவில் கிடக்கிறதோ? அலைபாயும் மக்கள்
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், பட்டப் பகலில் புகுந்த குரங்கு, அங்கிருந்த பணப் பெட்டியில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்ற நிலையில், அந்த பணம் எங்காவது விழுந்து கிடக்காதா என்ற ஆசையில் சில மக்கள் ஊர் முழுக்க சல்லடையாய் தேடி வருகிறார்களாம்.
குண்டூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், திடீரென ஒரு குரங்கு புகுந்து தன் கையில் இருந்த கொய்யா பழத்தை கடைக்குள் வீசியது. கொய்யா பழத்தை எடுக்கும் சாக்குகாட்டியபடி உள்ளே வந்த குரங்கு, பணப் பெட்டி இருக்கும் இடத்துக்கு சென்று அமர்ந்து, அதில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் உள்ள, 100 ரூபாய் நோட்டு கட்டை எடுத்துக் கொண்டு, கடையில் இருந்து வெளியேறியது.
அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் குரங்கை விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. குரங்கு பணத்தை வைத்து எதையும் செய்ய முடியாது. ஆசை தீர விளையாடிவிட்டு, பணத்தை எங்கேயாவது தூர போடத்தான் வாய்ப்புள்ளது. எனவே பணக்கட்டு எங்கேயாவது விழுமா என்ற ஆர்வத்தில் சிலர் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிவருகிறார்கள்.
கடந்த வாரம், உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில், மரத்தின் மேலிருந்து பணம் கொட்டியது. இதை பார்த்த பலரும் பண மழை பெய்வதாக நினைத்து ஆரவாரித்தபோது, ஒரு குரங்குதான் பணத்தை அப்படி வீசியது தெரியவந்தது.
யாரோ ஒருவருடைய பர்ஸை பறித்துச் சென்ற குரங்கு, மரத்தின் மேலிருந்து, பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து வீசியிருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது அதைப்போல பணம் கிடைக்குமா என்ற ஆர்வத்தில் குண்டூர் மக்கள் உள்ளனர்.