எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார் விஜய் மல்லையா
டெல்லி: வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.
அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. தற்போது விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும், அவரை நாடு கடத்தி கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த வாரம் கூடிய மாநிலங்களவை நெறிமுறைகள் குழு, அதில் மல்லையாவின் எம்.பி. பதவியைப் பறிக்க பரிந்துரை செய்தது. இருப்பினும் மல்லையாவின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவை நெறிமுறைகள் குழு நாளை கூடவுள்ள நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்காக மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாநிலங்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2002ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லையா, 2010ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.