கன்றுக் குட்டியை தெரியாமல் கொன்ற பெண்.. ஒரு வாரம் பிச்சை எடுக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து
பசுங்கன்றை தெரியாமல் கொன்றுவிட்ட குற்றத்துக்காக ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்க ம.பி. பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
பாட்னா: கயிற்றால் கட்டப்பட்ட பசுங்கன்றை இழுத்த போது கழுத்து நெரிக்கப்பட்டு அந்த கன்று இறந்ததை தொடர்ந்து பிராயசித்தமாக ஒரு வாரத்துக்கு பிச்சை எடுத்து அந்த பணம் மூலம் கங்கையில் நீராடி பாவத்தை கழுவ பெண்ணுக்கு ம.பி. மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரேச மாநிலம், மடாடின் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கம்லேஷ் (55). இவர் வீட்டில் மாடு, கன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி தாயிடம் இருந்த கன்றின் கயிற்றை இழுத்தபோது அந்த கயிறு கன்றின் கழுத்தில் இறுக்கியது. இதனால் கன்று இறந்தது.
திட்டமிட்டது இல்லை
இந்த கன்றானது திட்டமிட்டு கொல்லப்படவில்லை. எனினும் அஜாக்கிரதையால் கொல்லப்பட்டது. இதற்கு தன்னை தானே வருத்திக் கொள்ளும் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து தெரிவித்தது.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது
செய்த தவறுக்கு தண்டனையாக கம்லேஷ் என்ற அந்த பெண்ணை ஊரை விட்டு ஒரு வாரத்துக்கு கிராமத்தினர் தள்ளி வைத்தனர். பின்னர் அவர் ஒரு வார காலத்துக்கு பக்கத்து கிராமங்களில் பிச்சையெடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டது.
கங்கையில் பாவத்தை போக்க...
பிச்சையெடுத்த பணத்தை கொண்டு கங்கை சென்று அங்கு புனித நீராடி, செய்த பாவத்தை தொலைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கம்லேஷின் மகன் அனில் ஸ்ரீவாஸ் கூறுகையில், எனது தாய் தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தபோது நான் ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின் மீதான அச்சத்தால் யாரும் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் எனது தாய் பக்கத்து கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அவர் தினமும் பிச்சையெடுத்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்றுதான் குணமடைந்து வீடு திரும்பினார். எனினும் பஞ்சாயத்து தலைவர் பிறப்பித்த ஆணையை திரும்ப பெறவில்லை என்றார்.
தண்டனையை ஏற்கிறேன்
இதைத் தொடர்ந்து பஞ்சாயத்து உறுப்பினர்களை அழைத்த கம்லேஷ், பஞ்சாயத்தில் கொடுத்த தண்டனையை ஏற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸாருக்கு யாரும் புகார் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஜூலையிலும் இதுபோல்...
திக்ராம்கர் மாவட்டத்தில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவரின் மாடு உயர் ஜாதியைச் சேர்ந்தவரின் பயிரை மேய்ந்துவிட்டது. இதனால் அந்த மாட்டை அவர் கொன்றார். இதற்கு தண்டனையாக மாட்டை கொன்றவர் கங்கையில் நீராடி பாவத்தை போக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.