வாகனங்கள் மீது கல்வீச்சு, திறந்த கடைகள் மீது வெடிகுண்டு வீச்சு...நேற்று நடந்த கேரள பந்த்தில் பதற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று நடந்த பந்தில் திறாந்திருந்த கடைகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக ஏராளனமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான மனோஜும், மற்றொரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியான பிரமோத் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் வெட்டப் பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனோஜ் கொலையை கண்டித்து நேற்று கேரளாவில் பந்த் நடத்தப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
முழு அடைப்பை ஓட்டி கேரளாவில் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கல்வீச்சு...
வயநாடு, கொச்சி, கொல்லம் உள்பட 4 இடங்களில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதனால் கேரளா தமிழ்நாடு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு வீச்சு...
இந்நிலையில் கண்ணூர் ஆடூர் பாலம், மூணுபெரியா மற்றும் பெரனாசேரி ஆகிய பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 கடைகள் மீது வெடிகுண்டுகள் வீசிச் சென்றனர்.
பதற்றம்...
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனபோதும், இந்த வெடிகுண்டு தாக்குதல் சமபவத்தால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.
கூடுதல் பாதுகாப்பு...
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மனோஜ் கொலை சம்பவத்தை விசாரிக்க குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆனந்தகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.