மோடிக்கு எதிராக உருவாகும் கூட்டணியில் முலாயம், லாலு, நிதிஷ், தேவே கவுடா
டெல்லி: பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்துள்ளனர்.
மத்தியில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அவைகளில் பாஜகவை எதிர்த்து பேச எந்த கட்சிக்கும் அதிக அளவில் உறுப்பினர்கள் இல்லை. இதனால் அவர்களின் பேச்சு எடுபடவில்லை. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க வலுவான கூட்டணி அமைய உள்ளது. இந்த கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவே கவுடா, சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவர் துஷ்யந்த் சவ்தாலா ஆகியோர் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்த கட்சிகள் சேரும் புதிய கூட்டணிக்கு சமாஜ்வாடி ஜனதாதளம் என்று பெயர் வைக்க திட்டமிட்டுள்ளனர். கூட்டணிக்கு வரும் கட்சிகளில் சமாஜ்வாடி கட்சிக்கு தான் அவையில் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் சமாஜ்வாடி ஜனதாதளத்திற்கு முலாயம் சிங் யாதவ் தலைமை பொறுப்பேற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
Third front... My cartoon today pic.twitter.com/lqVwzheLIU
— Neelabh Banerjee (@NeelabhToons) December 4, 2014
இந்த புதிய கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து கருப்பு பண விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்தது பற்றி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் புதிய கூட்டணி கட்சி தலைவர்கள் முலாயம் சிங்கின் டெல்லி வீட்டில் இன்று மதியம் நடக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த விருந்தின்போது கூட்டணி பற்றி பேசி முடிவு செய்ய உள்ளனர்.