3 வருட 'பிப்ரவரி வறட்சிக்கு' பிறகு, பெங்களூரில் தொடரும் மழை!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பிப்ரவரி மாதத்தில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் மழை தொடர்ந்து வருகிறது.
பெங்களூரில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை அதிக குளிர் நிலவும். எனவே பொதுவாக இக்காலகட்டங்களில் மழை பெய்யாது. அதிலும், பிப்ரவரியில் கடந்த மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட சிறு மழையும் பெய்ததில்லை. ஆனால் நேற்று முன்தினம் மாலை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது

இந்த நிலையில், இன்றும் மாலை சுமார் 3.30 மணிக்கு மேல் திடீரென வானம் மேக மூட்டத்தோடு இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் பெய்தது. ஒசூர் சாலை, பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு, பன்னேருகட்டா ரோடு, மடிவாளா, ஹெச்எஸ்ஆர் லேஅவுட், ஜேபிநகர் உள்ளிட்ட தெற்கு பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளிலும் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது.
மழையால் லேசாக சாலையில் தண்ணீர் ஓடியது. மழை காரணமாக குளிர் குறைந்து, இரவு நேரத்தில் வெப்பநிலை சற்று அதிகரித்துள்ளது. எனவே பெங்களூர்வாசிகள் குளிரின் பிடியில் இருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் முதல் குளிர் வெகுவாக குறைந்துவிடும் என்பது வானிலை இலாகா கணிப்பாக உள்ளது.
பெங்களூரில் நாளை வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகவும், வெப்பம் சற்று அதிகரித்தும் காணப்படும். மாலை வேளையில் மழைக்கு வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications