நிலக்கரி, கனிம சுரங்கங்களை தனியாருக்கு கொடையாக கொடுப்பதா? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை அமைச்சரக பொறுப்பையும் வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையில்,"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளை பின்பற்றாதது ஏன்' என, மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான," பெஞ்ச்' முன், புதனன்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், வாகனவதியிடம், நீதிபதிகள், சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். நிலக்கரி இந்தியா லிட்.,டுக்கென ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன? இது தொடர்பாக, அரசு, விரிவான விளக்கம் அளிக்காத வரை, விசாரணையை தொடர முடியாது.
சுரங்க ஒதுக்கீட்டுக்காக, தனியார் நிறுவனங்களிடமிருந்து, எந்த அடிப்படையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பதையும், அரசு விளக்க வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள், இயற்கை வளங்கள். அவற்றை, தனியார் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, தன் விருப்பம் போல், வழங்க முடியாது. நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அல்ல. இதுகுறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, ""இது தொடர்பாக பதில் அளிக்க, இம்மாதம், 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்க வேண்டும்,'' என, அட்டர்னி ஜெனரல் கோரிக்கை விடுத்ததை அடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
காணாமல் போன ஆவணங்கள்
இதற்கிடையே, நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான, சில முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக, மத்திய அரசு தரப்பில், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் காணாமல்போன ஆவணங்கள் குறித்த விரிவான பட்டியலை சிபிஐ-யிடம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
சிபிஐ-க்கும் அமைச்சகத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ரகசியம் காக்கப்பட வேண்டியது என்பதால் அதுதொடர்பாக விரிவாக பேச முடியாது என நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுரங்க ஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து வருவதாக நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.