மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021: ஏழைப்பெண் சந்தனா பவுரி இனி எம்எல்ஏ..குவியும் பாராட்டு
மேற்குவங்க மாநிலம் சால்டோரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் சந்தனா பவுரிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
கொல்கத்தா: ஏழையாக பிறந்தவர்களும் எம்எல்ஏ ஆக முடியும் என்று நிரூபித்துள்ளார் சந்தனா பவுரி. தினக்கூலி தொழிலாளியின் மனைவியான இவர் சால்டோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மொந்தல் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சாதாரண ஓட்டு வீடும் 3 ஆடும், 3 மாடுகளும்தான் இவரது சொத்து. ஏழை பெண் ஒருவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லப்போவதால் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
சட்டசபைத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் சந்தனா பவுரி. தனது பெயர் டிவியில் ஒளிபரப்பான பின்னர் பக்கத்து வீட்டினர் சொல்லித்தான் தெரியும் என கூறியுள்ளார் சந்தனா பவுரி
கழிப்பறை வசதி கூட இல்லாத மண் குடிசையில் வாழும் சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் கட்டிட வேலை பார்ப்பவர். தினக்கூலியாக 400 ரூபாய் பெற்றுவருகிறார். அதிலும் மழை காலங்களில் இந்த வருமானம் கூட அக்குடும்பத்திற்கு கிடைக்காதாம்.
சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் பவுடியின் அசையா சொத்துகளின் மதிப்பு 30,311 ரூபாய் தானாம். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் சந்தனா பவுரி தனது வங்கிக் கணக்கில் 8,335 ரூபாயும், கணவரின் வங்கிக் கணக்கில் 1,561 ரூபாயும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கிறார்.
வேட்பு மனுவில் சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவருடைய அசையா சொத்துகளின் மதிப்பு 31,975 ரூபாய் தான். அவரின் வீட்டில் இரண்டு சிறிய அறைகள், அதில் ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரு ஃபேன், மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட ஒரு படுக்கை மற்றும் பள்ளி புத்தகங்கள் உள்ளன. கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. 3 ஆடுகள், 3 மாடுகள் மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகை உள்ளன
சந்தனா பவுரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவருடைய தந்தை காலமாகிவிட அவரை இள வயதிலேயே திருமணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை என்றும் தான் எம்.எல்.ஏவாக தேர்வானால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் முன்னர் தெரிவித்திருந்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மொந்தல் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். வெற்றி பெற்ற பின்னர் தனது குடும்பத்தைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கம்.. மோடி, அமித்ஷா முழு மூச்சாக முட்டி மோதியும் தோற்ற பாஜக!
ஏழை குடும்பத்தை சேர்ந்த சந்தனா பவுரி எம்எல்ஏவாக சட்டசபைக்குள் செல்லப்போகிறார். இவரது வெற்றியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். பணக்காரர்கள் மட்டுமல்ல ஏழைப் பெண்களும், சாமானிய மக்களும் எம்எல்ஏவாக முடியும் என்று நிரூபித்துள்ளார் சந்தனா பவுரி