மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் - பதற்றம்
கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் வாகனத்தின் மீது சிலர் கற்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திலீப்கோஷ் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் தொடங்கும் முன்பே வன்முறைகள் அதிக அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது இது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவு 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் வாகனம் உட்பட அவரது கான்வாய் கூச் பெஹார் மாவட்டத்தில் இன்று தாக்கப்பட்டது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிதால்குச்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு புறப்பட்டபோது அவரது கார் மற்றும் பிற வாகனங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக தலைவர் திலீப் கோஷ் காயமடைந்துள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயங்களுடன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் திலீப் கோஷ் பகிர்ந்துள்ளார்.
பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மேற்கு வங்க மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷின் காரும் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளதாக. பாஜகவின் வங்காள பிரிவு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சேதமடைந்த வாகனங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

நடந்த தாக்குதல் குறித்து திலீப் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை அசைத்த ஒரு சிலர் நாட்டு வெடிகுண்டுகள், செங்கற்கள் மற்றும் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் தனது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திலீப் கோஷ் கூறியுள்ளார். தனது காயத்தையும் சேதமடைந்துள்ள வாகனத்தின் புகைப்படங்களையும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் திலீப் கோஷ்.
மேற்கு வங்க மாநில காவல்துறையினர் இந்த தாக்குதலை தடுக்கவோ தன்னை பாதுகாக்கவோ முற்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் திலீப் கோஷ். இம்மாநிலத்தில் ஜனநாயகத்தின் நிலைபரிதாபகரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் வெடிகுண்டுகளை வீசியும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்களையும் தாக்குகின்றனர் என்று திலீப் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில் கால்களில் காயம் ஏற்பட்டதாக கூறி சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்து வருகிறார் மமதா பானர்ஜி. இப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீது பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.