ஐடி விங்கை வச்சு.. பாஜகவினர் மக்களை ஏமாத்துறாங்க.. டீஸ்டா, ஜூபைர் கைதால் கொந்தளிக்கும் மம்தா!
கொல்கத்தா: நபிகள் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நுபுர் ஷர்மா கைது செய்யப்படாத நிலையில், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டது ஏன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தன. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரித்த நிலையில், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் வலதுசாரிகள் பரப்பும் போலி செய்திகளின் உண்மைதன்மையை ஆராய்ந்து அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்விட்டர் பதிவுகளை முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், பாஜகவின் சமூக ஊடகப் பிரிவுகள் அனைத்தும் போலி வீடியோக்கள் மற்றும் தகவல்களை பரப்பி மக்களை ஏமாற்றி வருகின்றன. நீங்கள் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் தவறான தகவல்களை பேசினாலோ, அல்லது பரப்பினாலோ, அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். அப்பொது மவுனம் மட்டும் பதிலாக இருக்கும்.
இவ்வளவு ஏன், அவர்கள் மக்களை கொலை செய்தாலும் கூட, அரசு அவர்களை கைது செய்யாது. ஆனால் உண்மையை பேசினால் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள். டீஸ்டா செதல்வாட் மற்றும் முகமது ஜுபைர் இருவரும் என்ன தவறு செய்தார்கள்? இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்த உலகமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று குற்றம்சாட்டின்யுள்ளார்.