மேற்கு வங்க தேர்தலில் பெரும் வன்முறை.. சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டதில் 4 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வங்கத்திலுள்ள கூச் பெஹார் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் கட்சிக்காரர்கள் சிஆர்பிஎப் வீரர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்த சிஆர்பிஎப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறையைத் தடுக்கவே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமிருந்து இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கூச் பெஹார் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.