60 வயதில் வந்த காதல்.. பாஜக பெண் தொண்டரை திருமணம் செய்த மூத்த தலைவர்.. யார் இந்த திலீப் கோஷ்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது 60வது வயதில் பாஜக பெண் தொண்டரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்யும்படி தாய் கூறி வந்த நிலையில் ஒரு மகனுக்கு அம்மாவாக இருக்கும் பாஜக பெண் தொண்டரை காதலித்து கரம்பிடித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் திலீப் கோஷ். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக செயல்பட்டார். திலீப் கோஷ்க்கு இப்போது 60 வயது ஆகிறது.

இருப்பினும் அவர் திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் திலீப் கோஷ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது தாயின் ஆசையாக இருந்து வந்தது. அவர் தொடர்ந்து திலீப் கோஷிடம் கூறினார். ஆனால் திலீப் கோஷ் ஏற்கவில்லை.
இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டில் எக்கோ பார்க்கில் திலீப் கோஷ் நடைப்பயிற்சிக்கு சென்றார். அப்போது பாஜகவை சேர்ந்த பெண் தொண்டர் ரிங்கு மஜும்தார் என்பவர் பழக்கம் ஆனார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அப்போது ரிங்கு மஜும்தாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும், அவருடன் இப்போது கணவர் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே தான் ரிங்கு மஜும்தார், திலீப் கோஷிடம் தனது காதலை கூறினார். அதனை திலீப் கோஷ் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று நடந்தது. கொல்கத்தா அருகே உள்ள நியூ டவுனில் உள்ள வீட்டில் சிம்பிளாக திருமணம் நடந்தது. திலீப் கோஷ் மற்றும் ரிங்கு மஜும்தார் பாரம்பரிய உடை அணிந்து வேதமந்திரங்கள் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமண விழாவில் இருவரின் குடும்பத்தினர், சில பாஜக தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் திருமணத்தில் பங்கேற்று ஜோடியை வாழ்த்தினர். இவரது இந்த திருமணத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து கடிதம், பூங்கொத்து அனுப்பி வைத்தார். அதேபோல் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் சுவேந்து அதிகாரியிடம் கேள்வி கேட்டபோது அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
60 வயதில் திருமணம் செய்த திலீப் கோஷ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினர். கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பாஜகவின் மேற்கு வங்க மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications