லொள்.. லொள்.. அரசு அதிகாரியிடம் நாய் போல் குரைத்த நபர்.. ஏன் தெரியுமா?.. அட காரணத்தை பாருங்க!
கொல்கத்தா: அரசு அதிகாரியின் காரை மறித்து லொள்.. லொள்.. என நாய் போல் ஒருவர் குரைத்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது. இவர் யார்?, எதற்காக இப்படி செய்தார் என்பது பற்றிய விபரங்களை பலர் தேடும் நிலையில் அதுபற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு, ஓட்டு அடையாள அட்டை, ஆதார் உள்பட பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பம் செய்யும்போது பலர் பெயரை தவறாக பதிவு செய்து விடுகின்றனர்.
இது விண்ணப்பம் செய்பவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். பல இடங்களில் பெயர் தவறாக இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும்.

தவறாகும் பெயர்கள்
இதனால் ஆவணங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக ஒவ்வொருவரும் கவனமாக செயல்பட்டாலும் கூட சில வேளைகளில் தவறுகள் நிகழ்ந்து விடும். இதில் சிலரது பெயரில் எழுத்துக்கள் தவறாக இடம்பெற்றிருக்கும். சில வேளைகளில் எழுத்து மாற்றம் வேறுவிதமான அர்த்தத்தை கொடுத்துவிடும். அந்த வகையில் தான் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது தற்போது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தத்தாவுக்கு பதில் குட்டா
மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி தத்தா. இவர் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்தார். இதையடுத்து ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதில் அவரது பெயர் தவறாக இடம்பெற்றிருந்தது. அதாவது ஸ்ரீகாந்தி தத்தா(Dutta) என்பதற்கு பதில் ஸ்ரீகந்தி குட்டா (Kutta) என கூறப்பட்டு இருந்தது. குட்டா என்பது இந்தி மொழியில் நாய் என்று பொருள்படும். இதனால் பெயர் மாற்றத்தை பார்த்து அவர் கோபத்தின் உச்சத்துக்கு சென்றார்.

திருத்தம் செய்ய கோரிக்கை
உடனடியாக அவர் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார். இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அவரது பெயரை திருத்தம் செய்து வழங்காமல் தவிர்த்து வந்தனர். இதனால் ஸ்ரீகந்தி தத்தா வேதனை அடைந்தார். இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. அதிகாரிகளை சந்தித்து பெயர் திருத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தி வந்தார். ஆனால் அதிகாரிகள் மட்டும் அவரை கண்டுக்கொள்ளவே இல்லை.

நாய் போல் குரைத்து கோரிக்கை
இந்நிலையில் தான் அவர் அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரி காரில் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த ஸ்ரீகாந்தி தத்தா அவரை காரை மறுத்தார். இதையடுத்து ரேஷன் கார்டில் தனது பெயர் தவறாக உள்ளது. அதனை திருத்தி கொடுக்க வேண்டும் என்பதை வித்தியாசமான முறையில் தெரிவித்தார்.அதன்படி அவர் நாய் போன்று குரைத்தார். இதையடுத்து அதிகாரி அங்கிருந்து செல்ல முயலவே அவர் விடவில்லை.

பாதிக்கப்பட்டவர் கூறுவது என்ன?
இதையடுத்து அவர் தொடர்ந்து அதிகாரியை நோக்கி கோரிக்கை மனுவை வழங்கினார். மனுவை வாங்கி படித்த அதிகாரி ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்து தருவதாக கூறினார். இதையடுத்து ஸ்ரீகாந்தி தத்தா நாய் போன்று குரைப்பதை நிறுத்தினார். இதுபற்றி ஸ்ரீகாந்தி தத்தா கூறுகையில், ‛‛ரேஷன் கார்டில் தத்தாவுக்கு பதில் குட்டா என பெயர் இருந்தது. திருத்தம் செய்ய 3 முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தற்போது நான் மீண்டும் விண்ணப்பம் செய்ய சென்றபோது இணை பிடிஓ வந்தார். இதையடுது்து நாய் போன்று குரைத்து அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் கூட கேட்காமல் காரில் செல்ல முயன்றார். நான் விடவில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பெயர் திருத்தத்துக்காக எத்தனை நாள்தான் வேலையை விட்டு அலைய முடியும்?'' என கோபத்தை வெளிப்படுத்தினார்.
|
பரவும் வீடியோ
இதற்கிடையே ரேஷன் காரில் பெயர் திருத்தம் செய்யக்கோரி ஸ்ரீகாந்தி தத்தா நாய் போன்று குரைத்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications