அள்ள அள்ள பணம்.. அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.20 கோடி பறிமுதல்.. மே.வங்க அமைச்சர் பார்த்தா கைது
கொல்கத்தா: மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. கட்சியின் முன்னாள் பிரமுகர் சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் தாவி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மமதாவுக்கு எதிராகவே களம் கண்டார். இந்நிலையில் இம்மாநிலத்தில் அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

இப்படியான சூழலில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனையடுத்து நேற்று மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டில் இறங்கியது. இந்த ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டார்ஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டது.
பார்த்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு பணியில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவராவார். இதனையடுத்து ரெய்டில் சுமார் ரூ.20 கோடி அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணம் பள்ளி சேவை ஆணையத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வங்கி அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். இதில் கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாகும். எண்ணிக்கையின் முடிவில் சுமார் ரூ.20 கோடி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பார்த்தாவை கைது செய்துள்ளனர்.
அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்திலிருந்து 20 மொபைல் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பார்த்தா மற்றும் அர்பிதா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் மட்டுமல்லாமல், இணை அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா என அம்மாநில அரசியலின் முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை மிரட்டுவதற்கு மத்திய அரசு இவ்வாறு தொடர் சோதனைகளை மேற்கொள்வதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு, அமைச்சர் ஒருவரையே மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications