திரிணாமுல் கட்சி பொதுச்செயலாளர்.. மருமகன் அபிஷேக்குக்கு உயர் பதவி வழங்கிய மம்தா.. பதறும் சீனியர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க எம்.பி.யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி.
வெற்றிக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் உயர்மட்ட குழு கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது.
மருமகனுக்கு பதவி
இந்த கூட்டத்தில் மேற்கு வங்க எம்.பி.யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த வந்த மருமகனுக்கு பெரிய பதிவியை வழங்கியுள்ளார் மம்தா. இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
எதிர்பார்த்த விஷயம்தான்
கலாச்சார பிரிவு தலைவராக முன்னாள் திரைப்பட இயக்குனர் ராஜ் சக்ரபோர்த்தி நியமிக்கப்பட்டார். இது தவிர பல்வேறு நிர்வாகிகள் புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டனர். 33 வயதான அபிஷேக் பானர்ஜி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது திரிணாமுல் கட்சியினர் அனைவரும் ஏற்கனவே எதிர்பார்த்த விஷயம்தான் என்று சொல்கிறார்கள்.
பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்தவர்
2019 நாடளுமன்ற தேர்தலில் கட்சிக்காக முழுமையாக தேர்தல் பணியாற்றிய அபிஷேக் பானர்ஜி, இந்த தேர்தல் வெற்றிக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார். மம்தா வெற்றி பெற திட்டங்களை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே அபிஷேக் பானர்ஜிதான். பிரசாந்த் கிஷோர் வகுக்கும் திட்டங்களை செயல்படுத்துவது அபிஷேக் பானர்ஜியின் வேலை.
பதறும் சீனியர்கள்
கட்சி வேட்பாளர்கள், புதிய நிர்வாகிகள் ஆகியவற்றை செய்ததும் தேர்வு செய்ததும் இவர்தான். அபிஷேக் பானர்ஜி மீது மம்தா பானர்ஜிக்கு எக்ஸ்டிரா பாசம் உண்டு. நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அபிஷேக் பானர்ஜி வீட்டுக்கு விசாரணைக்கு வந்தபோது அதற்கு கடும் எதிப்பு தெரிவித்தவர் மம்தா. தற்போது பொதுச் செயலாளராகி விட்டதால் முன்பு சுவேந்து அதிகாரியை ஓரம் கட்டியதுபோல், அபிஷேக் நம்மையும் ஓரம் கட்டி விடுவாரோ என்று சீனியர்கள் பதறுகின்றனராம்.