பவன் கல்யாணுக்காக சிரஞ்சீவி 'ஆனந்த கண்ணீர்'..பின்னணியில் அந்த "ஒரிஜினல் ரத்த சரித்திரம்" தெரியுமா?
விஜயவாடா: ஆந்திராவின் துணை முதல்வராகப் போகும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாணின் 'தேர்தல்' வெற்றியை நடிகர் சிரஞ்சீவியின் குடும்பமே ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டாடி மகிழ்வதன் பின்னணியில் மிகப் பெரிய ரத்த சரித்திரமே இருக்கிறது என்பதுதான் பேசுபொருள்.
ஆந்திராவில் என்டிஆர் கோலோச்சிய சினிமாவில் சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார். என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஆந்திராவில் அதீதமாக நிலவிய ஜாதிய அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு சிரஞ்சீவியும் சிக்காமல் இல்லை.

ஆந்திரா அரசியலில் கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற ஒரு விஷயம்தான் இது. ரத்த சரித்திரம் என்கிற திரைப்படத்தை 2 பாகங்களாக இயக்குநர் ராம்கோபால் வர்மா எடுத்திருந்தாரே அந்த படத்தின் 'நாயகர்களான' பரிதாலா ரவி, சூரியுடன் தொடர்புடையது இந்த விஷயம். பரிதாலா ரவி, நிழல் உலக தாதாவாக மட்டுமல்லாமல் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் அசைக்க முடியாத அமைச்சராகவும் இருந்தார்.
அந்த தருணத்தில் சிரஞ்சீவியுடன் பரிதாலா ரவிக்கு நிலத் தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலத் தகராறில் தம்பி பவன் கல்யாணை 'சினிமா' பாணியில் கடத்திச் சென்றாராம் பரிதாலா ரவி. அத்துடன் ஒரு மாதத்துக்கும் மேலாக பவன் கல்யாணை தமது கஸ்டடியில் வைத்து மொட்டையடித்திருக்கிறாராம் பரிதாலா ரவி. இதன் பின்னர் பரிதாலா ரவிக்கு கப்பம் கட்டியே தம்பியை சிரஞ்சீவி மீட்டார் என்பதுதான் அந்த விஷயம்.

ஆந்திரா அரசியலில் இது நீண்டகாலமாக பேசப்படுகிற விஷயம்தான். 2018-ம் ஆண்டே இத்தகைய 'வதந்தி' அல்லது 'யூகங்கள்' போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பவன் கல்யாண் ஒரு சம்பவம் செய்தார். பரிதாலா ரவி 2005-ல் எதிரி சூரியால் கொல்லப்பட்டார். சூரியும் அவரது வலது கரத்தால் 2011-ல் கொல்லப்பட்டார். ஜனசேனா கட்சியை உருவாக்கிய பவன் கல்யாண் திடீரென 2018-ல் பரிதாலா ரவியின் வீட்டுக்குப் போனார். பரிதாலா ரவியின் மனைவி பரிதாலா சுனிதா, தெலுங்குதேசம் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அவருடன் பல மணிநேரம் உரையாடிவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு தமக்கும் பரிதாலா குடும்பத்துக்கும் இடையே எதுவுமே இல்லை என்பதைப் போல வெளிப்படுத்திவிட்டும் வந்திருந்தார்.
பவன் கல்யாணுக்கு முடி குறைவாக இருக்கும் சில படங்களை ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். தொண்டர்கள் அண்மையில் பரப்பிவிட்டு, இப்படிச் செய்த தெலுங்குதேசம் கட்சியுடனா கூட்டணி வைக்கிறார்? என கேள்வி கேட்டிருந்தனர். இவற்றின் உண்மைத்தன்மை எதுவும் உறுதியானதாக இல்லை. ஆனால் தாம் ஜெயிக்க முடியாத அரசியலில் தம்பி பவன் கல்யாண் ஜெயித்து காட்டிவிட்டாரே என்கிற பேரானந்தத்தை சிரஞ்சீவியிடம் பார்க்க முடிந்தது என்பது நிதர்சனம்.












Click it and Unblock the Notifications