போச்சே.. 5 மேஜர் பாயிண்ட்.. சொந்த மாநிலம் இமாச்சலில் கோட்டைவிட்ட பாஜக தலைவர் ஜேபி நட்டா.. பின்னணி
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் பாஜக கோட்டை விட்ட முக்கிய 5 காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் கருத்து கணிப்புகளை புறம்தள்ளி் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
குஜராத் தேர்தலில் நாளை ரிசல்ட்.. 10 ஆண்டு இல்லாத அளவுக்கு குறைந்த ஓட்டுப்பதிவு.. யாருக்கு சாதகம்?
காங்கிரஸ் வெற்றி
அதன்படி மதியம் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆம்ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றியை ருசிக்கவில்லை. இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. பாஜகவுக்கு இந்த தோல்வி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜேபி நட்டா சொந்த மாநிலம்
ஏனென்றால் இந்த இமாச்சல பிரதேசம் தான் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமாகும். இதனால் தேர்தலுக்கான தோல்வி பொறுப்பை அவர் ஏற்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது. அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
முதல் விஷயம்
கடந்த 2 ஆண்டுகளாக இமாச்சல பிரதேச பாஜகவில் பிரச்சனை உள்ளது. பதவி, அதிகாரம் பெறுவதில் பலருக்கும் போட்டி இருந்தது. இருப்பினும் குஜராத்தில் முதலமைச்சர் மாற்றியதுபோல் இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாகூரை கட்சி மேலிடம் மாற்றவில்லை. இவர் மிகவும் மென்மையான குணம் கொண்டவர் என்பதால் கட்சி மேலிடம் அமைதி காத்து வந்தது. இருப்பினும் தலைவர்கள் இடையேயான மனக்கசப்பு தேர்தலில் எதிரொலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
2வது காரணம்
மேலும் பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜேபி நட்டா இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் நேரிடையாக இமாச்சல பிரதேச மாநில விவகாரங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய விஷயங்கள் நேரிடையாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட கட்சியின் பிற மேலிட தலைவர்கள் வரை செல்லவில்லை என கூறப்படுகிறது. இது தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
3வது காரணம்
இதுதவிர ஆப்பிள்களை அட்டை பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொகை என்பது 12 சதவீதமாக இருந்தது. இது சமீபத்தில் 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் 20 க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில் ஆப்பிள் விவசாயம் பிரதானமாக உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ஆப்பிள் சார்ந்த தொழில் செய்வோர் பரவி உள்ளனர். இதனால் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தால் ஆப்பிள் விவசாயிகள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் திரும்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.
4வது காரணம்
மேலும் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பிரசாரம் செய்தபோது, ‛‛எனது முகத்தை பார்த்து வாக்களியுங்கள்'' என கூறினார். குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மாறாக அந்த பார்முலாவை தான் மோடி இமாச்சல பிரதேசத்திலும் பயன்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளூர் வேட்பாளர்களையும், தலைவர்களையும் ஒதுக்கிவைத்ததாக தொண்டர்கள், மக்கள் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
5வது காரணம்
மேலும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் மாநில நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஓட்டளிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர். அதனால் தான் 2019 தேர்தலில் பாஜகவுக்கு மொத்தமாக ஆதரவு கொடுத்த இமாச்சல பிரதேச மக்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி உள்ளனர். மேலும் தேசிய அளவில் பிரதமர் மோடி மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் மாநிலத்தில் சக்தி வாய்ந்த தலைவர் பாஜகவில் இல்லை என அவர்கள் வாக்காளர்கள் நினைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.