10 மணி நேரப் போராட்டம்... வாட்ஸ் அப் உதவியால் மலையிலிருந்து மீட்கப் பட்ட இளைஞர்!

கைகளில் செல்போனை வைத்துக் கொண்டு இந்த இளைஞர்கள் எப்போது பார்த்தாலும் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றக் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அந்த இணையத்தால் பலரது வாழ்வு பாழாகும் செய்தி அடிக்கடி ஊடகங்களில் வரத்தான் செய்கிறது. இந்நிலையில், பெங்களூரில் இளைஞர் ஒருவரின் உயிரைக் காக்க அவரது கையிலிருந்த செல்போனும், அதிலிருந்த வாட்ஸ் அப்பும் உதவியிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த கவுரவ் அரோரா(24) மற்றும் அவரது நண்பர் பிரியாங்க் ஷர்மா(25) இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கிருஷ்ணராஜ புரத்தில் ஒரே அறையில் தங்கி இருக்கும் இவர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஞாயிறன்று நண்பர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள மதுகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மதுகிரி மலையின் உச்சியில் உள்ள ஒரே கல்லில் ஆன 40 அடி உயர பாறையை அடையும் முயற்சியில் மலை ஏறியுள்ளனர் நண்பர்கள். மதியமாகி விட்டதால் வெயிலின் உக்கிரம் தாங்காமல் பாதியிலேயே நின்று விட்டார் பிரியாங்க். அதனால், தொடர்ந்து தனியாக மேலே ஏறியுள்ளார் கவுரவ்.
ஒரு கட்டத்தில் வியர்வையால் கைகள் ஈரமாகி பாறையை பிடிக்க இயலாமல் வழுக்கு கீழே விழுந்து விட்டார் கவுரவ். உயரமான இடத்தில் இருந்து உருண்டு விழுந்த அவர் அங்கிருந்த சிறு குட்டையில் இருந்த சகதியில் விழுந்துள்ளார். மாலை 6 மணி ஆனபோதும் கௌரவ் திரும்பி வராததால் அச்சமடைந்த பிரியாங்க், இது தொடர்பாக மதுகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மதுகிரி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த மதுகிரி மலையில் தீப்பந்தங்களுடன் உள்ளூர்வாசிகளும் கவுரவ் அரோராவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கைப்பேசி மூலமாக கவுரவ்வை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் பிரியாங்க் ஷர்மாவின் கைபேசிக்கு கவுரவ் ‘வாட்ஸ் அப்' மூலமாக 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருந்த அடையாளங்கள் மூலம் உள்ளூர் மக்களின் உதவியுடன் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.15 மணி அளவில் பள்ளத்திலிருந்து மீட்கப் பட்டார் கவுரவ்.
கை, கால் என உடல் முழுவதும் காயமடைந்திருந்த கவுரவ் முதலில் மதுகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவுரவ் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கௌரவ் அரோராவின் நண்பர் பிரியாங்க் ஷர்மா கூறுகையில், ‘மாலை 3.45 மணி அளவில் கவுரவ் உயரமான இடத்தில் இருந்து விழுந்திருக்கிறார்.பாறைகளில் உருண்டு விழுந்ததில் அவருடைய செல்போன் கீழே விழுந்து பழுதாகிவிட்டது.இதனால் அவர் பேசுவது எங்களுக்கும், நாங்கள் பேசியது அவருக்கும் சரியாக கேட்கவில்லை.மேலும் அங்கு சரியாக நெட்வொர்க் இல்லாததால் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இந்நிலையில் அவர் தான் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் அப்' மூலமாக அனுப்பினார்.அதன் மூலமாகவே கௌரவ் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டோம்.10 மணி நேரமாக மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட போதும்,'வாட்ஸ் அப்' இல்லாவிடில் என்னுடைய நண்பனை உயிருடன் மீட்டிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்''எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications