நிர்பயா வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மைல்கற்கள்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேரின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றிய பின்னணியை பார்க்கலாம்.
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேரின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 4 மாதத்திலேயே அவரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியுள்ளனர்.
1977ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சியை தொடங்கிய தீபக் மிஸ்ரா, சேவை தீர்ப்பாணையத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். இதன் பின்னர் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1996ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக 1997ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தீபக் மிஸ்ரா.
2009ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2010ம் ஆண்டு மே மாதம் வரை இந்தப் பதவியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டு, 2011ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்படும் வரை அவர் இங்கு பணியாற்றி வந்தார்.
உச்சநீதிமன்றத்தில் 7 ஆண்டுகள்
சுமார் 7 ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக செயல்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் மாதம் 2017ல் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற 4 மாதத்திலேயே உச்சநீதிமன்றம் அண்மைக் காலமாக சரிவர செயல்படவில்லை, முக்கியமான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜூனியர் நீதிபதிகளுக்கு அவை ஒதுக்கப்படுவதாக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அக்டோபரில் பதவிக்காலம் முடிகிறது
64 வயதாகும் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. சிவில், கிரிமினல், வருவாய் மற்றும் சேவை, விற்பனை வரி குறித்த வழக்குகளில் சிறப்பான பயிற்சி பெற்றவர் தீபக் மிஸ்ரா.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு
யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என் உத்தரவிட்டவர் தீபக் மிஸ்ரா. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி யாகூப் மேனன் தாக்கல் செய்த தூக்குதண்டனை மனுவை நிராகரித்ததால் கொலை மிரட்டலுக்கு ஆளாகியவர் தீபக் மிஸ்ரா.
கர்ணனுக்கு சிறைத்தண்டனை
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே மாதத்தில் தீர்ப்பு அளித்தது தீபக் மிஸ்ரா அமர்வு. இதே போன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் குழுவிலும் தீபக் மிஸ்ரா இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.