சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சையது சலாவுதீன் பின்னணி என்ன தெரியுமா?
அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சலாவுதீனை யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீநகர் : இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் தாக்குதல்களை அரங்கேற்றி வரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அவரின் பின்னணி என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனை அமெரிக்கா சர்வதேச குற்றவாளியாக அறிவித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி. காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய ராணுவ வீரர்களை கொல்வது உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த சையது சலாவுதீன் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது தீவிரவாதத்தை ஒழிக்கும் நாடுகள் மீதான உக்கிரப் பார்வை திரும்பியுள்ளது.
சையது முகம்மது யூசுப் ஷாவாக இருந்தவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான பிறகு அனைவராலும் சையது சலாவுதீன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் ஒருங்கிணைந்த ஜிஹாத் கவுன்சிலின் தலைவராகவும் இவர் உள்ளார். இந்த அமைப்பு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானோடு இணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
எங்கே பிறந்தார்?
1946ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பேட்கமில் பிறந்த சலாவுதீனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முகம்மது யூசுப் ஷா அவர் அந்த குடும்பத்தின் ஏழாவதாக பிள்ளையாவார். இவரது தந்தை தபால் துறையில் பணியாற்றியவர். சலாவுதீனுக்கு திருமணமாகி 5 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
குடிமைப் பணியாளராக விருப்பம்
சலாவுதீன் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டிய போதும் பிற்காலத்தில் குடிமைப் பணி உயர் அதிகாரியாக விரும்பியுள்ளார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் படித்த அவர், ஜமாத்-ஈ-இஸ்லாமி செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அதன் காஷ்மீரின் கிளை அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.
மாதர்ஷாவில் சேர்ந்து பணி
பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது சலாவுதீன் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார், முஸ்லீம் பெண்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்களை கைவிடுவதை எதிர்த்து போராடியதோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவான போராட்டங்கள், பேரணிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னர் குடிமைப் பணி தேர்வு எழுதாமல், மாதர்ஷாவில் இஸ்லாமிய ஆசிரியராக சேர்ந்தார்.
நல்ல நிலையில் குடும்பம்
சலாவுதீனின் ஐந்து மகன்களில், மூத்த மகன் ஷசகீல் யூசுப் ஸ்ரீநகரின் மருத்துவப் படிப்புகளுக்கான ஷேர்-ஈ-காஷ்மீர் கல்வி நிலையத்தில் துணை நிலை மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் ஜவீத் யூசூப் கணினி செயற்பாட்டாளராக கல்வித் துறையில் பணியாற்றுகிறார். 3வது மகன் ஷகித் யூசுப் ஷேர்-ஈ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையில் ஆராய்ச்சி படித்துள்ளார். 4-வது மகன் வாகித் யூசுப் ஷேர்-ஈ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புகள் கல்விநிலையத்தில் மருத்துவராக வுள்ளார். கடைசி மகன் ஸ்ரீநகரில் தொழில்முனைவர் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
சட்டசபை தேர்தலில் போட்டி
1987ம் ஆண்டு சலாவுதீன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவருக்கு ஸ்ரீநகரின் அமிர்கடல் தொகுதியில் ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகளான ஒருங்கிணைந்த முஸ்லீம் முன்னணி கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தோல்விதான் கிடைத்தது. பின்னர் இந்திய இறையாண்மைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட தொடங்கியதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தீவிரவாத அமைப்புடன் இணைப்பு
சலாவுதீனின் கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் வெடித்ததால் 1989ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார், இதனையடுத்து "மாஸ்டர்" என்று அழைக்கப்படும் முஹம்மது ஆசன் தர் என்பவரால் நிறுவப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பில் சேர்ந்த சில காலங்களிலேயே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ்-ன் ஆதரவால் அதன் தலைவரானார் இதனைத் தொடர்ந்தே முகம்மது யூசுப் ஷா என்ற தனது இயற்பெயரை சையது சலாவுதீன் என்று மாற்றிக் கொண்டார். 12வது நூற்றாண்டில் ஆயுதமேந்தி போராடிய இஸ்லாமிய தலைவரின் பெயர்தான் இந்த சலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது.