நிருபர் கார்த்திகை செல்வன் எதற்காக கொலை செய்யப்பட்டார்?: பரபரப்பு தகவல்கள்
சாத்தூர்: பத்திரிகை நிருபர் கார்த்திகை செல்வன் கொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நவீன நெற்றிக்கண் வார இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர் கார்த்திகை செல்வன்(40). அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று மாலை சாத்தூர்-கோவில்பட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கார்த்திகை செல்வன் குறித்து விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது,
நீண்ட காலமாக பூட்டிக் கிடந்த தமிழ்நாடு ஹோட்டலை கார்த்திகை செல்வன் 3 அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து நடந்தி வந்துள்ளார். ஹோட்டல் திறப்பு விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. திறப்பு விழாவுக்கு சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் வந்துள்ளார்.
கார்த்திகை செல்வன் மதுரை-திருமங்கலத்திற்கு அருகில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நிலங்கள் வாங்கியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அதில் அவருக்கு பகையும் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட முக்கிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். நேற்று மணல் கடத்தல் குறித்து புகைப்படம் எடுத்துவிட்டு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தற்காப்புக்காக எப்பொழுதும் ஆயுதத்துடன் சுற்றுவாராம்.