பாஜகவின் குஜராத் கோட்டையில் ஓட்டையை போட்ட "ஜாதி" ஓட்டுகள்!
அகமதாபாத்: பாரதிய ஜனதாவின் கோட்டையான குஜராத்தில் இடைத்தேர்தலில் தம் வசம் இருந்த 3 தொகுதிகளை காங்கிரசிடம் அது பறிகொடுக்க ஜாதி ஓட்டுகளே காரணம் என்று கூறப்படுகிறது.
குஜராத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அதில் பாஜக வசம் இருந்த 9 தொகுதிகளில் டீஷா, மாங்க்ரோல், காம்பாலியா ஆகிய 3 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்க்ரோலில்..
மாங்க்ரோல் தொகுதியில் பாஜக, கராடியா ஜாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸோ வலுவான கோலி ஜாதியில் அதுவும் ஜூனாகாத் கோலி ஜாதி சங்கத் தலைவரை களத்தில் இறக்கியது. ஒட்டுமொத்த கோலி ஜாதி ஓட்டும் காங்கிரஸுக்கு போய்விட்டது.
முஸ்லிம்கள் வாக்கு..
அதேபோல் இத்தொகுதியில் கணிசமான முஸ்லிம்கள் வாக்குகளும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்குப் போக கோலி ப்ளஸ் முஸ்லிம் ஓட்டுகளால் வெற்றிக் கொடி நாட்டப்பட்டுவிட்டது.
காம்பாலியா
இந்த தொகுதியைப் பொறுத்தவரை பாஜகவும் காங்கிரஸும் ஆகிர் ஜாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தொகுதியைச் சேர்ந்தவரை நிறுத்தியது. பாஜகவோ வேறு ஒரு தொகுதியில் இருந்து வேட்பாளரை இறக்கியது. இதுதான் இங்கு தோல்வி அடையக் காரணமாக சொல்லப்படுகிறது.
டீஷா
டீஷாவிலும் ஜாதிதான் தீர்மானித்திருக்கிறதாம். காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தபப்ட்ட கோவாபாய் ரபாரி நீண்டகாலம் பொதுவாழ்க்கையில் இருப்பவர். இத்தொகுதியில் நன்கு பரிச்சயமானவர். பெரும்பான்மை சமூகமான மல்தாரி ஜாதியைச் சேர்ந்தவர். ஆனால் பாஜகவோ தாகோர் ஜாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக்கியது. பொதுவாக தாகோர் ஜாதியினர் காங்கிரஸ் ஆதரவாலர்கள் என்பதால் அந்த வாக்குகள் காங்கிரஸூக்கே கிடைத்தனவாம்.