ஆசிய கோப்பை கிரிக்கெட்: வென்றாலும் சொதப்பிய இந்தியா, ஆவேசமாக ஆடி அசத்திய ஹாங்காங்
துபாயில் நேற்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று சூப்பஈண்டிஅர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
அனுபவமும், திறமையும் மிக்க இந்திய அணி வெற்றி பெற்றதில் வியப்பு இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில் அனுபவம் அற்ற அணியான ஹாங்காங் தோல்வியைத் தழுவினாலும் அசத்தலாகப் போராடி பார்வையாளர்களை வியக்கவைத்தது.
அதே நேரம் வெற்றி பெற்ற இந்திய அணி ஆட்டத்தில் ஏராளமான தவறுகள் செய்து சொதப்பியது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்ய குமார் - விராட் கோலி இருவரும் இணைந்து 45 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தது விறுவிறுப்பு ஊட்டுவதாக இருந்தது.
பந்துவீச்சில் ஆவேஷ் கான் - அர்ஷ்தீப் சிங் ஜோடி 97 ரன்களை விட்டுக்கொடுத்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருந்தாலும் பந்துவீச்சை மேலும் கூர்தீட்டுவது அவசியம் என்பதை கேப்டன் ரோஹித் சர்மா நிச்சயம் உணர்ந்திருக்கக்கூடும்.
இந்தியா vs ஹாங்காங்: என்ன நடந்தது?
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். முதல் 2 ஓவர்களில் இந்தியா வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்தது. 3வது ஓவரில் அதிரடியை தொடங்கிய ரோஹித் சர்மா 2 சிக்சர், 1 பவுன்டரியை விளாசினார். 21 ரன்களில் அவர் விடைபெற, கே.எல்.ராகுல் 39 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2 சிக்சர்களை அவர் விளாசியிருந்தாலும் 1 பவுண்டரி கூட அவரது பேட்டில் இருந்து கிடைக்கவில்லை.
- தேசிய விளையாட்டு தினம்: இதை ஏன் கொண்டாடுகிறோம்? 5 தகவல்கள்
- ஒரே கிரிக்கெட் வீரர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் விளையாடிய தருணம்
- இந்தியா - பாகிஸ்தான்: 'ஆட்ட நாயகன்' ஹர்திக்கின் கடைசி ஓவர் சிக்சரில் இந்தியா வெற்றி
கோலியின் அரைசதம்: கொண்டாடிய ரசிகர்கள்
13 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், ஹாங்காங் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். டி20 போட்டியில் கோலி தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து கோலியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான், ஹாங்காங் உடனான ஆட்டத்தில் அவரது செய்ல்பாடு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் கோலியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளன. 44 பந்துகளில் கோலி 59 ரன்களும் சூர்ய குமார் 26 பந்துகளில் 6 சிக்சர் 6 பவுன்டரி என 68 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41 ரன்களும் கின்சித் 30 ரன்களும் விளாசினர்.
பந்துவீசிய விராட் கோலி
பந்துவீச்சில் இந்தியா தடுமாறிய நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலி ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 17வது ஓவரை வீசினார். ஒரேயொரு ஓவர் வீசி 6 ரன்கள் மட்டுமே அவர் விட்டுக்கொடுத்தார். 6 ஆண்டுகள் கழித்து டி20 போட்டியில் கோலி பந்துவீசியது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாங்காங் அணி, இந்தியாவுடனான போட்டியிலும் முழு திறனை வெளிப்படுத்தியது. அனுபவம் வாய்ந்த அணிக்கு எதிராக 152 ரன்கள் வரை சேர்த்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தோல்விக்குப் பின்னர் பேசிய ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான், " 13வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்; அதற்கு பின்னர் சூர்ய குமார் யாதவ் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் செய்த விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. டெத் ஓவர்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டார்
என்ன தவறு செய்தது இந்தியா?
இந்திய அணி பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக ஆவேஷ் கான் 4 ஓவர்களை வீசி 53 ரன்களையும் அர்ஷ்தீப் சிங் 44 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
இந்தியா தனது பவர்பிளேயில் 44 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், ஹாங்காங் அணியோ 51 ரன்களை குவித்தது. அதேபோன்று பேட்டிங்கில் சூர்யகுமார் களத்திற்கு வரும்வரை இந்திய அணியின் ரன் ரேட் வெறும் 7 மட்டுமே இருந்தது.
ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் ஆடும் வெலனில் தேர்வு செய்த ரோஹித் சர்மாவின் முடிவை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். "ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளித்தது நல்ல விஷயம்தான் என்றாலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கியிருக்கலாம். தீபக் ஹூடா பேட்டிங் பவுலிங் என இரண்டையும் செய்திருப்பார்" என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதேபோல "இந்திய அணியின் பந்துவீச்சு போதுமான அளவுக்கு எதிரணியை பயமுறுத்தும் வகையில் இல்லை" என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஆட்டங்களில் இந்தியாவின் ஆடும் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=tQN5NG_WVJM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்