குஜராத் தேர்தல்.. ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஓட்டுப்போட அனுமதியே கிடையாது.. அட இப்படி ஒரு காரணமா?
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சஜான்பூர் எனும் கிராமத்தில் 1200 பேர் வசித்து வரும் கிராம மக்கள் மட்டும் காலம்காலமாக ஓட்டளிக்காமல் உள்ளனர். இதன் பின்னணியில் தான் வியக்க வைக்கும் பூகோள விளையாட்டு உள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
2வது கட்டமாக டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறாக 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
குஜராத் தேர்தல்.. “ஷாக்” ரிசல்ட்! உயர்ந்த “கிரிமினல் பேக்ரவுண்ட்” வேட்பாளர்கள்! முதலிடம் எந்த கட்சி?
குஜராத் தேர்தல் பிரசாரம்
இந்த தேர்தலால் குஜராத் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பிற மாநில பாஜக முதல்வர்கள் குஜராத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பிற தலைவர்களும், ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர பிற கட்சியின் வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்றும், பொதுக்கூட்டங்களிலும் பேசி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
குஜராத்தில் உள்ள அதிசய கிராமம்
இந்நிலையில் தான் குஜராத் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் கட்சியின் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு திருவிழா போன்று தேர்தல் களைகட்டி உள்ளது. இதனால் மாநிலமே தேர்தல் ஜூரத்தில் உள்ள நிலையில் அங்குள்ள ஒரு கிராமம் மட்டும் எந்தவித பதற்றமும் இன்றி அமைதியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த கிராம மக்களுக்கு குஜராத்திலேயே ஓட்டு அளிக்க அனுமதி கிடையாதாம். இதனால் இந்த கிராமத்தை அதிசய கிராமம் என சிலர் கூறுகின்றனர். குழப்பமாக உள்ளதா?.. ஆம் உண்மை தான். இது எந்த கிராமம் எதற்காக கிராம மக்களுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமை இல்லை என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
சஜான்பூர் கிராமம்
குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் திம்லா. இந்த கிராமம் குஜராத் -மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது இந்த கிராமத்தில் தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் இந்த கிராமத்தையொட்டிய சஜான்பூர் கிராமம் மிகவும் அமைதியாக உள்ளது. இந்த கிராமத்தில் எந்த அரசியல் கட்சியினரின் பேனர்களும், கொடிகள் என எதுவும் இல்லை. கிராம மக்களும் வீதியில் வந்து தேர்தல் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்வது இல்லை.
காரணம் என்ன?
இந்த சஜான்பூர் கிராமத்தில் மொத்தம் 1,200 பேர் வசித்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் யாரும் குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பது இல்லை. ஏன் இந்த மாற்றம் என நினைத்தால் அதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது குஜராத் மாநிலத்தின் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் திம்லா கிராமத்தையொட்டி சஜான்பூர் இருப்பது புவியில் ரீதியாக குஜராத்துக்குள் உள்ளது. ஆனால் இந்த கிராமம் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைந்துள்ளது. பூகோள அமைப்பின் படி அந்த கிராமம் குஜராத் மாநிலத்துக்குள் இருந்தாலும் நிர்வாக ங்கள் அனைத்தும் மத்திய பிரதேசத்துடன் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஓட்டு
இதனால் தான் இவர்கள் குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பது இல்லை. இவர்கள் மத்திய பிரதேச தேர்தலில் தான் ஓட்டளிக்கின்றனர். இதுபற்றி அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காம்ஜி கூறுகையில், ‛‛சாஜன்பூர் புவியில் ரீதியாக கொஞ்சம் வித்தியாசமான கிராமமாக உள்ளது. குஜராத்தில் இருந்தாலும் கூட இது மத்திய பிரதேச மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் குஜராத் அரசியல்வாதிகள் யாரும் தேர்தல் உள்பட எந்த வேளையிலும் வருவது இல்லை.
குஜராத் வழியே பயணம்
இந்த சஜான்பூர் மத்திய பிரதேச மாநிலத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தின் கீழ் உள்ளது. இந்த கிராமம் மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் குஜராத்துக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் குஜராத் மாநிலத்தை கடந்து தான் செல்ல வேண்டும் என்னும் இன்னும் சுவாரசியமான விஷயமாகும்.