நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தை காங்கிரஸ் அரசுகள் வேவுபார்த்தது ஏன்?
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் உயிரோடு இருந்தாரா இல்லையா என்ற விவாதத்தைப் போலவே காங்கிரஸ் அரசு ஏன் நேதாஜி குடும்பத்தை வேவுபார்த்தது என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க அரசு அண்மையில் பகிரங்கப்படுத்தியது. அதில் 1964ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிருடன் இருந்திருக்கலாம் என்பதை சில ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
பெரும்பாலான ஆவனங்களில் நேதாஜி குடும்பம் வேவு பார்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறது. குறிப்பாக நேதாஜியின் சகோதரர் சரத் போஸ்தான் வேவு பார்க்கப்பட்டிருக்கிறார்.. இதற்குக் காரணம் அவர்தான் நேதாஜியின் மூளையாக இருந்தார் என கருதப்பட்டது.... மேற்கு வங்கத்தில் மட்டுமே அவர் தொடர்பாக 1,824 கோப்புகள் இருக்கின்றன எனில் பார்த்துக் கொள்ளலாம்..
சரத் சந்திரபோஸ், காங்கிரஸுக்கு எதிரான இயக்கத்தை நாடு தழுவிய நடத்த முயற்சித்தவர். நேருவின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை நடத்த முயற்சித்தவர் என்றே கருதப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நேதாஜி நாட்டைவிட்டு வெளியேறிய போது இந்தியாவின் சரத்போஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மிகத் தீவிரமாக இயங்கினர். தெற்கு கொல்கத்தா இடைத்தேர்தல் ஒன்றில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அபார பெருவெற்றியையும் பெற்றிருந்தார் சரத்போஸ்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசுக்கு எதிரானவராக சரத்போஸ் முத்திரை குத்தப்பட்டிருந்தார். அவர் மும்பைக்கு சென்றபோதும்கூட தொடர்ந்து வேவுபார்க்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த முயன்ற சரத் போஸின் முயற்சி அவரது மரணத்தால் நிறைவேறாமல் போனது...