ஜெ., ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் பி.பி. பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டம்?
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில், கர்நாடக ஹைகோர்ட்டில் பல்டியடித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கையே தொடர செய்யக்கூடாது என்று திமுக தலைவருக்கு கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடும் நெருக்கடியை சந்தித்த அசு வக்கீல் பி.வி,ஆச்சாரியா, தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டவர்தான் பவானிசிங்.
அபராதம் விதித்த நீதிபதி
இவர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு, குறிப்பாக ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், வழக்கின் இறுதி கட்டத்தில் ஆஜராகாமல் இழுத்தடித்த பவானிசிங்கிற்கு, சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் குன்ஹா அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.
செல்ஃப் சர்ட்டிபிகேட்
இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிறகு பேட்டியளித்த பவானிசிங், என்னை எல்லோரும் சந்தேகப்பட்டனர். ஆனால், பார்த்தீர்களா... எப்படி கேஸை ஜெயிக்க வைத்தேன் என்று என தனக்குத்தானே சர்ட்டிபிகேட்டும் கொடுத்துக்கொண்டார்.
பல்டியடித்தார் பவானிசிங்
ஆனால், கர்நாடக ஹைகோர்ட்டில் கடந்த 7ம்தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் என தீர்ப்புக்கு உள்ளாகியுள்ள நால்வரையும் ஜாமீனில் வெளியேவிட தனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என்று பவானிசிங் திடீரென கூறிவிட்டார்.இத்தனைக்கும், காலையில் நடந்த வாதத்தில், ஜெயலலிதாவை ஜாமீனில் விடக்கூடாது என்று சொன்னவரும் சாட்சாத்... பவானிசிங்தான். இந்த திடீர் பல்டி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அவர்தான் அன்னிக்கே சொன்னாரே..
அதே நேரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது. ஏனெனில் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும் 2 நாட்கள் முன்பு, ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், பவானிசிங் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவார் என எதிர்பார்ப்பது மூட நம்பிக்கையின் உச்சம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், வழக்கில் ஒரு பார்ட்டியான திமுக இதில் தலையிட்டு பவானிசிங்கிற்கு பதிலாக வேறு ஒரு அரசு வக்கீலை நியமிக்க கேட்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.
எதுக்கு வம்பு.. பதுங்கும் திமுக
ஆனால் திமுக தரப்பிலோ இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம். ஜாமீன் வழங்குவதை எதிர்த்து எதற்காக கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று நினைப்பதை போல உள்ளது. இருப்பினும் இப்படியே திமுக தலைவர் பொறுமையாக இருந்தால், ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகள் பாமகவுக்கும், தேமுதிகவுக்கும் சென்றுவிடும் என்ற அச்சம் திமுக நிர்வாகிகளிடம் உள்ளது
திமுகவினர் நெருக்கடி
எனவே உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுகவினர் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மனம் மாறியுள்ள கருணாநிதி
பவானிசிங்கின் போன் அழைப்புகளை சோதித்து பார்த்தாலே அவர் ஏன் ஆஜராக கூடாது என்று புரிந்துவிடும் என்னும் அளவுக்கு திமுகவினர் தலைமையிடம் குமுறி வருகின்றனர். இதன்பிறகுதான் கருணாநிதி லேசாக மனதை மாற்றிக்கொண்டு, பவானிசிங்கிற்கு எத்தனை நாக்கு என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும் திமுக திட்டமிட்டு இருக்கிறது.