மோடிக்கு எதிராக வாரணாசியில் பிரசாரம்: "போட்டி பூரி சங்கராச்சாரி" அறிவிப்பு!
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் போட்டி பூரி சங்கராச்சாரியார்.
டெல்லியில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. சலீம் வீட்டில் பூரி சங்கராச்சாரி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சுவாமி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே வன்முறை வெடித்தது. 2002 குஜராத் வன்முறைகளுக்கு நரேந்திர மோடிதான் பொறுப்பு. வாரணாசியில் போட்டியிடும் மோடி ஒரு மோசமான கிரிமினல் குற்றவாளி.
அவரை அம்பலப்படுத்த வாரணாசி தொகுதிக்குப் போய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. ஆனால் இந்த நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் வெல்ல வேண்டும் என்பதுதான் என் இலக்கு.
எல்லா பாவங்களையும் செய்திருக்கிறார் மோடி. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளால் நாட்டில் பதற்றமான நிலைமைதான் நீடிக்கிறது.
மதத்தின் பெயரால் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சமாஜ்வாடி கட்சியின் ஆஸாம் கான் மீது தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.
இவ்வாறு பூரி சங்கராச்சாரியாக தம்மை அழைத்துக் கொள்ளும் சுவாமி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத் கூறினார்.
யார் பூரி சங்கராச்சாரி
தம்மை பூரி சங்கராச்சாரியாக சுவாமி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத் அழைத்துக் கொண்டாலும் ஸ்ரீ சங்கராச்சாரியா புஜ்யபாத ஸ்வாமி நிஸலனந்தா சரஸ்வதி மகாராஜ்தான் அதிகாரப்பூர்வ பூரி சங்கராச்சாரி ஆவார்.