அத்வானியின் கனவு.. “பிரம்மாஸ்திரத்தை” எடுத்த பாஜக! குஜராத்தில் பாஜகவுக்கு உதவுமா பொதுசிவில் சட்டம்?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. பாஜகவின் வாக்குறுதிகளில் முதன்மையானதாக கருதப்படும் இந்த பொது சிவில் சட்டம் கடந்து வந்த பாதை குறித்தும் இது குஜராத்தில் பாஜகவுக்கு உதவுமா என்பது பற்றியும் சற்று அலசுவோம்.
குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா அரசின் பதவிகாலம் நிறைவடைய இருக்கும் சூழலில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களால அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. வேட்பாளர் பட்டியலில் வெளியிடப்பட்டும் பிரச்சாரம் தீவிரம் அடைந்து இருக்கும் சூழலில் பாஜக தேர்தல் அறிக்கையை குஜராத்தில் வெளியிட்டு இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழகத்தில் பாஜக வெல்ல.. வேலூர் இப்ராஹிம் பக்கா வியூகம்!
பாஜக திட்டம்
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குஜராத் மாநிலத்தில் தங்கி இருந்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியிடப்பட தேர்தல் அறிக்கையில் பாஜக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து இருப்பது தெரிகிறது.
பிரம்மாஸ்திரம்
தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் இடம்பெற்று இருந்தாலும் பலரது புருவத்தை உயர்த்த வைத்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதுதான் பொது சிவில் சட்டம். குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது தற்போது விவாதப்பொருளாகி உள்ளது. இதை ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பேச்சின்போது குறிப்பால் உணர்த்தினார்.
அத்வானியின் கனவு
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலின் போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய அப்போதைய தலைவர் அத்வானி பொதுசிவில் சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார். அப்போது அது பெரும் விவாதத்தை கிளப்பியது. பாஜகவின் ஸ்டார் வாக்குறுதியாகவும் அது அமைந்தது. ஆனால், காங்கிரஸ் 2வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைத்தது.
வேற்றுமையில் ஒற்றுமை
2014, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக் சபா தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ளது. இங்கு பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சிறப்பு சட்டங்கள்
குடிமக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் காக்கவும் மதிக்கவும் செய்யும் வகையில் சிவில் சட்டங்கள் மதங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. திருமணம், சொத்துரிமை போன்றவற்றில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களுக்கு என சிறப்பு சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
பொது சிவில் சட்டம்
ஆனால், சிறப்பு சட்டங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டு அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் பல நாள் திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம் போன்றவற்றுக்கு பிறகு இதனை படிப்படியாக மாநிலங்களில் அமல்படுத்தி வருகிறது பாஜக.
விமர்சனங்கள்
அதே நேரம் பொது சிவில் சட்டம் என்பது மத சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும், இது அரசியலமைப்புக்கும், சிறப்பு சட்டங்களை பின்பற்றும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிரானது எனவும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் இது ஆபத்தாக முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஏற்கனவே தொடங்கிய பாஜக
பாஜக தேர்தலில் வென்றால் இந்த சட்டத்தை கொண்டு வரும் என்று நினைத்தால், அதுதான் இல்லை.. பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டது. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் இமாச்சல பிரதேச அரசும் பொதுசிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. குஜராத்திலும், கடந்த மாதமே இதற்கான பணிகளை மத்திய அரசு, மாநில பாஜக அரசும் தொடங்கிவிட்டன.
மோடி தலைமையில் கூட்டம்
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்துகொண்ட மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமைப்பதற்கான குழுவை ஏற்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி அறிவித்தார்.
கடந்த மாதமே திட்டம்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசின் திட்டமிட்டு அதனை மதிப்பீடு செய்வதற்கான குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அது நிறைவேறவில்லை.
என்ன தாக்கம்?
இந்த சூழலில் தற்போது பொது சிவில் சட்டத்தை தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டு இருப்பதால் அங்குள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக விழ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாஜகவுக்கு அது பெரிய விசயமல்ல. ஏற்கனவே இந்த வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே விழும் என்று கணிக்கப்பட்டது.
பாஜகவின் பிளான்
24 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சியை தக்க வைக்க உதவுவது பெருவாரியாக இருக்கும் இந்துத்துவ ஆதரவு வாக்குகள்தான். இந்த வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என்று சில கணிப்புகள் வெளியான நிலையில், சிந்தாமல் சிதறாமல் அதை பெறுவதற்காக பாஜக இந்த பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளது.