நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது... இரங்கலுக்குப் பின் ராஜ்யசபா ஒத்திவைப்பு
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கிய உடன் லோக்சபாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மறைந்து உறுப்பினர்களுக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக்கூட்டத்தொடரில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக சகிப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவதற்கு, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதேநேரத்தில் ஜிஎஸ்டி, நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. முதல் இரு நாள்களில் இந்திய அரசியல் சாசனம் தொடர்பான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கோரிக்கை வைத்தார்.
எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
ஆனால், சகிப்புத்தன்மை குறைந்து வருவது, மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மோடி கோரிக்கை
இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, சரக்கு மற்றும் சேவை வரிகள் மசோதாவை, குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற, அனைத்துக் கட்சிகள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஜி எஸ் டிமசோதா தொடர்பான அனைத்துக்கட்சிகளின் சந்தேகங்களுக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விளக்கம் அளிப்பார் என்றும், அனைத்து ஐயங்களையும் அவர் தீர்த்து வைப்பார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கருத்து
முக்கிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அதே நேரத்தில் மசோதாக்களுக்கு ஆதரவு தருவது குறித்து நேரடியாக எதுவும் பேசாத காங்கிரஸ் கட்சி, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் மிகுந்த அவசரம் காட்டுவதாகவும், அதை ஒரு கவுரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி போன்ற ஒரு முக்கிய மசோதாவை அவசரமாக நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை என்றும் அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனலை கிளப்புமா?
முக்கிய மசோதாக்கள் குறித்து ஆளும் பாஜக.,விற்கும், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வார்த்தை போர் வலுத்துள்ளது. இதனால், ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுமா அல்லது அனலை கிளப்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.