பாக். வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஒட்டுவதா?: ஃபெவிகுவிக் விளம்பரத்திற்கு எதிர்ப்பு
மும்பை: வாகா எல்லையில் பாகிஸ்தானிய வீரரின் பிய்ந்த காலணியை இந்திய வீரர் ஒட்டுவது போல் உள்ள ஃபெவிகுவிக் விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதை உடனே நீக்குமாறு இந்து அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தில் வாகா எல்லையில் மாலை நேர கொடியிறக்க நிகழ்ச்சியின்போது இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் ஒருவர் முகத்தில் மற்றொருவரின் கால் படும் அளவுக்கு நடந்து வருகிறார்கள்.
அப்போது பார்த்தால் பாகிஸ்தானிய வீரரின் காலணியின் அடிப்பகுதி பிய்ந்து தொங்குகிறது. இதை பிறர் கவனிக்கும் முன்பு இந்திய வீரர் தனது பாக்கெட்டில் இருந்த ஃபெவிகுவிக்கை எடுத்து ஒட்டிவிடுகிறார். இதனால் பாகிஸ்தான் வீரர் நிம்மதி அடைவது போன்று விளம்பரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
எல்லையில் உள்ள நம் வீரர்களை இவ்வாறு தான் அவமதிப்பதா? பிடிலைட் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த விளம்பரத்தை வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். நம் வீரர்கள் தங்கள் உயிரையும் பெரிதாக நினைக்காமல் இரவும், பகலும் நம் தேசத்தை காத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய வீரர் பாகிஸ்தானிய வீரரின் காலணியனை ஒட்டுவதாக விளம்பரத்தில் காட்டலாமா?
இந்த விளம்பரம் பலரின் மனதை காயப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராணுவ வீரர்களின் மனதை காயப்படுத்தியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications