இரவில் பேசிக் கொண்டிருந்த ஜோடி மீது வாலிபர் துப்பாக்கி சூடு.. ஒருதலைக் காதலா.. போலீசார் விசாரணை
டெல்லியில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்த ஆணையும் பெண்ணையும் வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: காஜல் என்ற பெண் தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் முக்கிய இடமான சிரி போர்ட் என்ற இடத்தில் இரவு 9 மணிக்குக்கு மேல் காஜல் என்ற பெண், தனது நண்பர் ஜதின் சர்காருடன் பேசிக் கொண்டிருந்தார். நொய்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வரும் இவர்கள் இருவரும் நண்பர்கள். வேலையை முடித்துவிட்டு வரும் போது, இங்கிருக்கும் பூங்காவிற்கு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பக்கம் வந்த வாலிபர் காஜலிடமும் ஜதினிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கும் போதே திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டார். பின்னர், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். துப்பாக்கிச் சூட்டில் காஜலுக்கு வயிற்றிலும், ஜதினுக்கு நெஞ்சு பகுதியிலும் குண்டு பாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஜதினுடன் வந்த அலோக் என்ற நண்பரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததால் அவர் போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் குற்றவாளியின் தந்தை சிஐஎஸ்எப் கான்ஸ்டபிளாலாக பணியாற்றி வருகிறார் என்றும் உரிமம் பெற்ற அவரது துப்பாக்கியை வைத்துத்தான் காஜலையும் ஜதினையும் அவரது மகன் சுட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.