ஏற்கனவே கொடுத்துவிட்டோம், தமிழகத்திற்கு கூடுதலாக நீர் அளிக்க முடியாது: சித்தராமையா
பெங்களூர்: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கிவிட்டோம். அதனால் கூடுதல் நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த ஆண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. மழை பெய்யாததால் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை.
இயற்கை பேரிடர் காலத்தில் காவிரி நதிநீர்ப்பகிர்வின்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய அளவு நீரை ஏற்கனவே அளித்துவிட்டோம். இனியும் கூடுதலாக நீர் அளிக்க முடியாது. காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 48 டி.எம்.சி. நீரை கேட்டு அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அது குறித்து நாங்கள் சட்டப்படி பார்த்துக் கொள்வோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்ட சட்டப்படி போராட்டம் நடத்துவோம் என்றார்.