தமிழகம்-கர்நாடக முதல்வர்களுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு!
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
கர்நாடகாவில் குடிக்க நீர் இல்லை என்பதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியவில்லை என்று கர்நாடக தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த, நீதிபதிகள் கூறுகையில், கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது. உச்சநீதிமன்ற உத்தரவை அரசுகள் மதித்தே நடக்க வேண்டும். நீதிமன்ற மாண்பை சீர் குலைக்க கூடாது. கூட்டாட்சி தத்துவம் கொண்ட இந்தியாவில், எந்த ஒரு மாநிலமும், சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்காமல் இருக்க முடியாது. மற்றொரு மாநிலத்திற்கு எதிராக சண்டையிட சுப்ரீம்கோர்ட்டை பயன்படுத்தக்கூடாது என்றனர்.
மேலும், விசாரணை நடைபெற்றபோது ஆஜராகியிருந்த மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலிடம், மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரும் முடியும் என சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்தது. எதற்கெடுத்தாலும் சுப்ரீம்கோர்ட் வாயிலாகவே தீர்வு பெற வேண்டும் என்பது கிடையாது. பேச்சுவார்த்தை மூலமாகவும் பிரச்சினையை தீர்க்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.