நாய் என்னவெல்லாம் செய்யுமோ அப்படியே இருக்கிறதே...யோகா: யெச்சூரியின் சர்ச்சை பேச்சு
புவனேஸ்வர்: நாய் என்னவெல்லாம் செய்யுமோ அவை அனைத்துமே யோகாவில் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்வதேச யோகா தினம் கடந்த 21-ந் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவிலும் நாடு முழுவதும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் தொடர்ந்தும் இடதுசாரிகள் இந்த யோகா நிகழ்ச்சிகளை இந்துத்துவா செயல்பாட்டின் ஒரு அங்கமாகவே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் நூறாவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
நாயும் யோகாவும்
யோகா பயிற்சியின் அனைத்து நிலைகளையும் நாயின் உடல் இயக்கத்தின்போது காண முடியும். நாய் படுக்கையிலிருந்து எழுந்ததும் முன்புற மற்றும் பின்புற கால்களை நீட்டி பெருமூச்சுவிடும். அதுபோன்ற பயிற்சி யோகாவில் உள்ளது.
இந்துத்துவா செயல்பாடு
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, யோகா தினம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை அணி திரள வைத்துள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கட்டமைப்பை பலி கொடுத்து விட்டு, இந்துத்துவா கொள்கையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே யோகா தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திசை திருப்பல்
கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கொள்கைகளைப் போன்ற ராஜதந்திரம்தான் யோகா தின பயிற்சி முகாம்கள். இதுபோன்ற பயிற்சிகள் மூலம் அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.
பசி பட்டினையை போக்குக
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த யோகா அவசியம் என்று கருதினால், முதலில் அவர்களது பசியையும் பட்டினியையும் போக்க முன்னுரிமை தர வேண்டும்.
இவ்வாறு யெச்சூரி பேசினார்.