"கிரேட் எஸ்கேப்".. லஞ்ச வழக்கிலிருந்து எதியூரப்பா, 2 மகன்கள், மருமகன் கூண்டோடு விடுதலை!
ரூ. 40 கோடி லஞ்ச வழக்கிலிருந்து கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
எதியூரப்பாவின் தலைவிதியை மாற்றி எழுதும் என்பதால் எதியூரப்பா ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் பதைபதைப்புடன் இருந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் "குஷி"யைக் கொடுத்து விட்டது பெங்களூரு சிபிஐ கோர்ட்.
கர்நாடக முதல்வராக எதியூரப்பா இருந்தபோது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தனது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட மேலும் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டாகும். இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, எதியூரப்பா, இரு மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.
குற்றச்சாட்டு - எதியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 20 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணமானது 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுபோக எதியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ. 20 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ. 40 கோடி பணமும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சப் பணமாகும். இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கும் அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ 20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர்.
இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எதியூரப்பா குடும்பத்திற்குக் கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும். உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எதியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. எதியூரப்பா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர் தீர்ப்பை அறிவிக்கையில் எதியூரப்பா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் சாட்சிகள் போதுமானதாக இல்லை அவர்களைத் தண்டிப்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
தீர்ப்பைக் கேட்க எதியூரப்பாவும் அவரது குடும்பத்தினரும் பெரும் திரளான பாஜகவினரும் வந்திருந்தனர். அனைவரும் தீர்ப்பைக் கேட்டு புன்னகை பூத்தனர். தீர்ப்புக்கு எதிராக சிபிஐ அப்பீல் செய்யும் எனத் தெரிகிறது.