சர்ச்சைகளுக்கு மத்தியில் எடியூரப்பாவுக்கு மத்திய அமைச்சர் பதவி-மோடி முடிவு
டெல்லி: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு இடம் கிடைக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
எடியூரப்பா மீதான சர்ச்சைகளையும் தாண்டி அவருக்கு நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் இடம் கொடுக்க முக்கிய காரணங்கள் உள்ளன.

மக்கள் ஆதரவு
கர்நாடகாவில் எடியூரப்பா மக்கள் ஆதரவுமிக்க தலைவர். குறிப்பாக முற்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தினரின் ஆதரவு பெற்ற தலைவர். எடியூரப்பாவை ஓரம் கட்ட பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியான அனந்த்குமார் ஆரம்பம் முதலே கடும் முயற்சி செய்தார். முதல்வர் பதவியைப் பிடிக்க பெரும் பிரயச்சித்தம் செய்து வந்தார். இந் நிலையில் நில அபகரிப்பு, சுரங்க ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா. இவருக்கு அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். இதையடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், இவரது கட்சியும் தோற்றன.

மீண்டும் பாஜகவில்...
ஆனால், எடியூரப்பா வசம் உள்ள லிங்காயத்து ஓட்டுகளை மனதில் வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியின் கடும் எதிர்ப்பையும் மீறி எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் இணைய வைத்தார் நரேந்திர மோடி. எடியூரப்பா முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் போட்டியிட்டது இப்போதுதான். இந்த தேர்தலிலேயே மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிவிட்டார். இத்தனைக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்டது நடிகர் ராஜ்குமாரின் மருமகள் கீதா. எடியூரப்பா திரும்ப வந்த பிறகு ஓராண்டுக்குள் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளதுமே அவர் மக்கள் செல்வாக்கை பறைசாற்றுவதாக உள்ளது.

கர்நாடகாவை கைக்குள் வைக்க
தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த முதல் மாநிலம் கர்நாடகாதான். இங்கு மட்டுமே அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. 2004ம் ஆண்டு முதல் இப்போதுவரை நடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாஜகவுக்கு கணிசமான எம்.பிக்களை அனுப்பிக்கொண்டிருப்பது கர்நாடகாதான். கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவைவிட்டால் மக்கள் ஆதரவுள்ள தலைவர் யாருமில்லை. அவருக்கு உரிய பதவி அளித்து கைக்குள் வைத்திருப்பதன் மூலம் கர்நாடகாவை தொடர்ந்து தனது கோட்டையாக வைத்திருக்க மோடி விரும்புகிறார்.

காங்கிரசை கட்டுப்படுத்த
கர்நாடகாவின் சிக்மகளூரில் இந்திராகாந்தியும், பெல்லாரியில் சோனியாகாந்தியும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரசின் கோட்டையாக கர்நாடகா இருந்த காரணத்தால், வட மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டாலும், 'பாதுகாப்புக்காக' கர்நாடகாவின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவதை நேரு குடும்பத்தார் வழக்கமாக கொண்டிருந்ததன் வெளிப்பாடுதான் இது. காங்கிரஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அளவுக்கு இருந்த கர்நாடகா, எடியூரப்பாவின் தீவிர முயற்சியால் பாஜகவின் கைக்கு மாறியது. மீண்டும் காங்கிரசின் கைக்குள் கர்நாடகா சென்றுவிடாமல் இருக்க எடியூரப்பாவே அருமருந்து என மோடி நம்புகிறார்.

அனுபவசாலி
எடியூரப்பா 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். இரண்டு ஆண்டுகாலம், துணை முதல்வராகவும், 3 ஆண்டுகாலம் முதல்வராகவும் பதவி வகித்தவர். துணை முதல்வர் மற்றும் முதல்வராக பணியாற்றிய காலகட்டங்களில் நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்று மக்கள் ஆதரவுள்ள பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தென் இந்திய பாஜகவின் மூத்த அரசியல்வாதி மற்றும் ஆட்சியில் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் எடியூரப்பா 'மெரிட்டில் பாஸ்' ஆகிறார்.

அத்வானி குரூப்பை அடக்க
கர்நாடகாவில் இருந்து அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில், எடியூரப்பா, அனந்தகுமார், சதானந்தகவுடா, ரமேஷ் ஜிகஜனகி ஆகியோர் பெயர்கள் உள்ளன. இதில் அனந்தகுமாரும், சதானந்தகவுடாவும் அத்வானி ஆதரவாளர்கள். எடியூரப்பாவுக்கும்- அனந்தகுமாருக்கும் நடுவேயான மோதல் உலக பிரசித்தி. ஊழல் குற்றச்சாட்டு வந்ததும், அத்வானிதான் உடனடியாக எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறங்க உத்தரவிட்டார்.
பதவியை ராஜினாமா செய்த பிறகு பேட்டியளித்த எடியூரப்பா, "அனந்தகுமார்தான் அத்வானியிடம் போட்டுக்கொடுத்து என்னை காலி செ்யதுவிட்டார்" என்று வெளிப்படையாக கூறினார். பாஜகவுக்கு திரும்பியபோதும், "மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் தாய் கட்சிக்கு வருகிறேன்" என்று அறிவித்தார். அத்வானியை மோடி அடக்கியதுபோல கர்நாடகாவில் அனந்தகுமாரை எடியூரப்பாவை விட்டு அடக்கச் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கு அச்சாரமாக டெல்லியில் மோடி- எடியூரப்பா சந்திப்பு நேற்று நடந்தது.

விடுவாரா அனந்தகுமார்
அனந்தகுமாருக்கு அமைச்சர் பதவியை அளிக்க மோடி தயக்கம் காட்டுகிறார். சீனியர் என்பதற்காக அமைச்சர் பதவியை அளித்தாலும் ஏதாவது டம்மி துறையை ஒதுக்கிவிடுவார் என்ற அச்சம் அனந்தகுமாருக்கு. அத்வானியிடம் சிபாரிசு கடிதம் கேட்டால் அவ்வளவுதான் ஆப்படித்து விடுரார்கள் என்பதை உணர்ந்துள்ள அனந்தகுமார், இப்போது ஆர்எஸ்எஸ்சை நம்பியுள்ளார். இதனால் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

எடியூரப்பாவுக்கு விவசாயத்துறை
எடியூரப்பாவுக்கு அமைச்சர் பதவி உறுதி. அவருக்கு முக்கியமான துறை அளிக்கப்பட வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அதற்கேற்ப கர்நாடக பாஜக முன்னாள் தலைவர், ஈஸ்வரப்பா, விவசாயத்துறையை எடியூரப்பாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக விவசாயத்துக்காக தனியாக ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்தது எடியூரப்பாதான். இதை தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. விவசாயிகளின் உரிமைக்காக நடத்திய போராட்டங்கள்தான் எடியூரப்பாவுக்கு அரசியலில் செல்வாக்கை அதிகரித்தது. இதையெல்லாம் வைத்து பார்த்து அவருக்கு வேளாண்துறை அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications