ஆஹா சூப்பர்! பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு.. அசத்தும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கா உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ள திட்டங்கள் அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவி வகிக்கவில்லை. அந்த வகையில் 2017ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவே இதனை கொண்டாடும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இதில் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டத்தின்படி ஏழை பெண் குழந்தைகள் பிறந்தது முதல் கல்வியை முடிக்கும் வரை அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டம் குறித்து கூறிய யோகி ஆதித்நாத், "உத்தரப் பிரதேசம் தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. 2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் கலவரங்களும், வன்முறைகளும் அதிகமாக இருந்தன. ஆனால் பாஜக பொறுப்பேற்றத்திலிருந்து சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன.
குறிப்பாக பெண்கள் மீதான குற்றங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 முக்கிய துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஏற்கெனவே மத்திய அரசு சார்பில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் மாநிலம் முழுவதும் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பக்க பலமாக கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் பங்காற்றுகிறது. மறுபுறம் மருத்துவ கல்லூரியை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை பொறுத்த அளவில் மாணவர்களை விட மாணவிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தொழிற் வளர்ச்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஆண்களை விட பெண் தொழிற் முனைவோர்கள்தான் அதிக அளவில் இருக்கின்றனர். எனவே இந்த அரசு புதிய தொழில் தொடங்க அதிக முக்கியதுவத்தை கொடுக்கிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவில் சிறு குறு தொழில்கள் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications