எல்லாத்தையும் எடுத்துக்கங்க சித்தப்பு... அகிலேஷ் ஐஸ் வைத்தும் இறங்கி வராத ஷிவ்பால்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டிருந்த குடும்பத் தகராறு முற்றியிருந்த நிலையில், எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பாவும் கட்சியின் தலைவருமான ஷிவ்பாலுக்கு ஐஸ் வைத்துப் பேசியுள்ளார். ஆனாலம் ஷிவ்பால் சமாதானம் ஆகவில்லை. கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் அவர் விலகி விட்டார்.
கடந்த 3 நாட்களாக உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் அகிலேஷ்க்கும் அவரது சித்தாப்பாவிற்கு கருத்து வேறுபாடு எற்பட்டு அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் அகிலேஷ் தனது சித்தப்பாவை சமாதானப்படுத்த இறங்கிப் பார்த்தார். நீங்கள் என் சித்தப்பா. உங்களுக்குத்தான் எல்லாம் என்று கூறியும் ஷிவ்பால் சமாதாம் ஆகவில்லையாம்.
இதற்கிடையே, அமர்சிங் மீது அகிலேஷின் கவனம் திரும்பியுள்ளது. தற்போதைய குழப்பத்துக்கு அவரே காரணம் என்பது அகிலேஷின் எண்ணம். வெளியாட்கள் தலையீடு இருந்தால் கட்சியை நடத்துவது சிரமம் என்று மறைமுகமாக அமர்சிங்கைத் தாக்கியுள்ளார் அகிலேஷ்.
எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையோ, சண்டையோ ஏற்படவில்லை. ஆட்சி மற்றும் அரசு ரீதியாகத்தான் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்றும், எனது தந்தையும், கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றுதான் நான் எப்போதும் ஆசைப்படுகிறேன் என்றும் அகிலேஷ் கூறியிருந்தார். மேலும், குடும்ப விஷயங்களைப் பொருத்தவரையில் நேதாஜி வார்த்தைப்படிதான் அனைவரும் நடக்கிறார்கள். நானும், அவர் கூறியபடிதான் நடப்பேன் என்று உறுதியாக சொல்லியிருந்தார்.
.
ஆனாலும் கட்சி, ஆட்சி விஷயத்தில் வெளிநபர்கள் தலையிட்டால் எதுவுமே சரியாக நடக்காது. நான் யாரையெல்லாம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினேனோ, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அகிலேஷ் யாதவ் மறைமுகமாக அமர் சிங்கை தாக்கி பேசியுள்ளார்.
சமாஜவாதி ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்ற அமர் சிங், மாநில அரசில் தலைமைச் செயலராக இருந்து அகிலேஷ் யாதவால் நீக்கப்பட்ட தீபக் சிங்கால் ஆகியோர் கட்சியில் தனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்பதும், சிவ்பால் சிங் யாதவ் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் தீபக் சிங்காலுடன் தொடர்ந்து நெருக்கமாக உள்ளனர் என்பதும் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டாக இருந்தது.
இதனால் கட்சி நிறுவனரும் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் கோபமடைந்தார். இதையடுத்து கடந்த 3 மூன்று நாட்களாக மாறி மாறி பதவி பறிப்புகள் அரங்கேறின. இந்த நிலையில் தனது சித்தப்பாவை சமாதானப்படுத்த அகிலேஷ் முயன்றார். ஆனால் அதில் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.