2க்கு பதில் 20 குழந்தைகள்.. ஏழ்மையை ஒழிக்க.. உத்தரகண்ட் பாஜக முதல்வரின் பலே ஐடியா
டேராடூன்: கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் ரேசன் பொருட்கள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளங்கள் என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால், கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய முதல்வராக திராத் சிங் ராவத் என்பவர் நியமிக்கப்பட்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் இவர் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்.
உத்தரகண்ட் முதல்வர்
இந்நிலையில் அவரது பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடையில் அதிக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதிக குழந்தைகளை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். மேலும், உணவுப் பொருட்கள் அனைவருக்கும் முறையாகக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாட்டில் பல கோடி பேர் வேலையிழந்தனர். அடுத்த வேலை உணவுக்கே பல கோடி பேர் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் காரணமாகப் பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் 5 கிலோ உணவு தானியங்கள் மற்றும் ஒரு நபருக்கு ஒரு கிலோ பருப்பு வகைகளை வழங்குகிறது.
ரேசன் பொருட்கள்
இந்நிலையில் குறைவான குழந்தைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு மிகக் குறைவான அளவே உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் திராத் சிங் ராவத், "குடும்பத்தில் ஒருவருக்கு 5 கிலோ ரேசன் வழங்க்படுகிறது. ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் அவர்களுக்கு 50 கிலோ ரேசன் கிடைக்கும், 20 பேர் இருந்தால் 100 கிலோ ரேசன் கிடைக்கும்.
20 குழந்தை
ஆனால் இரண்டு மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிலர், தங்களுக்கு மட்டும் குறைவான அளவு ரேசன் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். உங்களுக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நேரம் இருக்கிறது என்றால், ஏன் நீங்கள் 20 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு அதிகளவில் ரேசன் பொருட்கள் கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர் சர்ச்சை
முன்னதாக, இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், வரலாற்றை மாற்றிக் கூறியது நேற்று சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் பற்றி இவர் பேசிய பேச்சு, சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கிழிந்த ஜீன்ஸ் உடைகளை அணிந்து, மற்றவர்களுக்கு எப்படி முன்னுதாரணமாகத் திகழ முடியும்? என்று அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.