சர்ச்சைக்குரிய பேச்சு.. மதபோதகர் ஜாகீர் நாயக் இந்தியா திரும்புவது ஒத்திவைப்பு
மும்பை: வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக், இந்தியா திரும்பும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தனர்.
இதனால் ஜாகீர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான "பீஸ் டிவி'க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.
மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா திரும்பும் திட்டத்தை 2 அல்லது மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அவர் செல்லவிருப்பதாக ஜாகீர் நாயக்கின் உதவியாளர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் ஜாகீர் நாயக்கை இந்தியா திரும்பியவுடன் கைது செய்ய வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது