சவுதியில் தெலுங்கானா பெண் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை
ரியாத்: சவுதியில் வீட்டு வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தின் தபீர்புரா பகுதியில் இருக்கும் ஷா காலனியை சேர்ந்தவர் அசிமா காத்தூன்(25). அவர் ஏஜெண்ட் மூலம் வீட்டு வேலை செய்வதற்கான விசா வாங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்திற்கு வேலைக்கு சென்றார்.
பணிப்பெண் விசா வழங்குவதை அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதால் அவர் வியாபார விசாவில் ரியாத் சென்றார். ரியாத் சென்ற இடத்தில் அவரது முதலாளியான அப்துல் ரஹ்மான் அலி முகமது அவரின் விசார காலமான 90 நாட்கள் முடிந்த பிறகு சட்டவிரோதமாக அவரை வீட்டில் அடைத்து வைத்தார்.
ரியாத் சென்றதில் இருந்து அசிமா பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் அவரது குடும்பத்தார் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போன் செய்த அசிமா முதலாளி தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்வதாகவும், தன்னை இங்கிருந்து எப்படியாவது காப்பாற்றுமாறும் கூறி கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் ரியாத்தில் இருந்து அசிமாவின் வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை போன் அழைப்பு வந்துள்ளது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் அசிமா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.