38 வயதில் 20 வயது பெண்ணை ரகசியமாய் மணந்த சோயிப் அக்தர்
கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளரான 38வயதான சோயிப் அக்தர், 20 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் சோயிப் அக்தர். மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில், 1999ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர், நிக்நைட்டுக்கு எதிராக இவர் வீசிய பந்து வீச்சு இதுவரை தகர்க்க முடியாத அதிவேக பந்து வீச்சு சாதனையாக இருந்து வருகிறது. கிரிக்கெட்டில் இருந்து குறுகிய காலத்திலேயே ஓய்வுபெற்ற இவர், இப்போது மோசமான ஒரு சாதனையையும் செய்துள்ளார்.
அக்தருக்கு தற்போது 38வயதாகிறது. அவர் 20 வயதான ரூபப் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்பெண்ணை அக்தர் மணமுடிக்க உள்ளதாக கடந்த மாதமே ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தபோதிலும், இதை அவர் மறுத்துவந்தார். இந்நிலையில், கராச்சியின் அருகேயுள்ள ஹரிபூர் என்ற பகுதியில் நேற்று, அக்தர் திருமணம் நடந்தேறியது.
மிக எளிமையான முறையில் ஒரு சில உறவினர்களை மட்டுமே அழைத்து, இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இம்மாதம் 12ம்தேதி அக்தர் தனது பெற்றோருடன், ரூபப் வீட்டுக்கு சென்று திருமண ஏற்பாடுகளை பேசி முடித்ததாக பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. ரூபப்புக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர், இவரின் தந்தை ஒரு தொழிலதிபராகும்.