சீனாவில் ஒரே நாளில் 4000 முறை நில அதிர்வு... 66000 பேர் வெளியேற்றம்!
பெய்ஜிங்: சீனாவில் 7 பேர் உயிரைக் குடித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிங்ஜியாங் உய்கூர் பகுதியில் நேற்றுமுன் தினம் 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 71 பேர் படுகாயமடைந்தனர்.
பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீ்ட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 66 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீன பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இவைகளில் பெரும்பாலானவை 4 ரிக்டருக்கு அதிகமானவை.
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் இன்னும் நிலநடுக்க பீதியிலேயே உள்ளனர். எனினும், பேரழிவு மேலாண்மை நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளதாக ஜிங்ஜியாங் மாகாண அரசு தெரிவித்துள்ளது.