48 வெளிநாட்டவரை விடுதலை செய்ததது சதாம் ஆதரவுப் படை! இந்தியர் விடுதலை பற்றி தகவல் இல்லை!!
கிர்குக்: ஈராக்கில் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 48 வெளிநாட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் விடுதலை தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவு சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். சதாம் உசேன் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அந்நாட்டின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத் அருகே முகாமிட்டிருக்கிறது.
சதாம் ஆதரவுப் படை கைப்பற்றிய நகரங்களில் ஒன்று திக்ரீத். இது சதாம் உசேனின் சொந்த ஊராகும். இந்நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அங்கு பணிபுரிந்த ஏராளமான வெளிநாட்டவரும் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 48 பேரை பிணைக் கைதிகளாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பிடித்து வைத்திருந்தனர்.
இவர்கள் துருக்கி, நேபாளம், வங்கதேசம், துருக்மேனிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய நாட்டவர். திக்ரீத் நகரில் மருத்துவமனை ஒன்றின் கட்டுமானப் பணியில் இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது இவர்கள் அனைவரையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் விடுதலை செய்துள்ளது.
அதே நேரத்தில் மொசூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்கள் விடுதலை தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.