பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இந்து பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் திருமணமான இந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தப்பட்டவருக்கே மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதேபோல சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்தியா தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கபடி போட்டி! இந்தியா கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்லும்! பாஜக அண்ணாமலை ஆரூடம்!
அராஜக சம்பவங்கள்
இஸ்லாமிய மதநெறிகளை தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இவ்வாறு இருக்கையில், அந்நாட்டில் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அராஜக செயல்களுக்கு இந்தியா தரப்பில் வலுவான கண்டனங்களை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கொலை
சில நாட்களுக்கு முன்னர், சிந்து மாகாணத்தின் நரஸ்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருமணமான பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறியது. அதேபோல கடந்த மார்ச் மாதம் தன்னுடைய காதலை ஏற்காததால் அந்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பூஜா குமாரி எனும் இந்து பெண்ணை சுட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 20ம் தேதி, கைபர் பக்துன்கவா மாகாணத்தை சேர்ந்த சீக்கிய ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
கடத்தல், கட்டாய மதமாற்றம்
இந்த தொடர் தாக்குதல்கள், கடத்தல், கட்டாய திருமண சம்பவங்கள் அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புரா, இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று என்று கோரிக்கை விடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
பதில் கடிதம்
தற்போது இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் இந்தியா தரப்பில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.