உலக மக்கள் அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தவர் கலாம்: ஒபாமா புகழஞ்சலி
வாஷிங்டன்: மறைந்த அப்துல்கலாம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஊக்கசக்தியாக திகழ்ந்தவர். இந்தியர்கள் மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் அவர் உந்து சக்தியாக இருந்தார் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பேராசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார். கலாமின் திடீர் மரணத்தால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.
உலகத் தலைவர்கள் கலாமின் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியுட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க மக்களின் சார்பாக...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி அமெரிக்க மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜதந்திரி...
சாதாரண நிலையில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், ஒரு ஆராய்ச்சியாளராகவும், ராஜதந்திரியாகவும் இருந்து இந்தியாவின் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மதிப்பு மிக்க தலைவராக விளங்கினார்.

நாசா வருகை...
1962-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவுக்கு வந்திருந்த அப்துல் கலாம், இந்திய-அமெரிக்க நல்லுறவு பலப்பட வேண்டும் என்று விரும்பி அதற்கான ஒத்துழைப்பை நல்கினார். இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி ஆய்வு கூட்டு முயற்சிகள் விரிவாக்கம் பெற அவர் பெரிதும் பாடுபட்டார்.

உந்து சக்தியாக விளங்கியவர்...
இந்தியாவின் பதினொன்றாவது ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய-அமெரிக்க நல்லுறவு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருந்தது. அப்துல் கலாமின் தன்னடக்கமும், எளிமையும், பொதுச் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்வலர்களுக்கும் உந்து சக்தியாக விளங்கியுள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்
இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டவர் அப்துல் கலாம் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications