10 வயது சிறுவனுக்கு லிங்கன் எழுதிய அரிய கடிதம்... ரூ.14.5 கோடிக்கு ஏலம்!
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது ரூ. 14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஆபிரகாம் லிங்கன். இவர் கடந்த 1865ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகனான லின்டன் யூசர் என்ற 10 வயது சிறுவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் லிங்கன்.
அந்தக் கடிதத்தை அவர் தனது கைப்பட எழுதி, கையொப்பமும் இட்டிருந்தார். மேலும் அதில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற போது தான் பேசிய உரையின் கடைசி பகுதியிலிருந்து சுமார் 13 வரிகளை எழுதியிருந்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதும் இக்கடிதத்தை யூசர் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்தக் கடிதம் நேற்று முன்தினம் ஹெரிடேஜ் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்ட து. அப்போது இந்தக் கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் 14.5 கோடி ரூபாய் ஆகும். ஏலத்தில் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது.