4 நாளில் வேலையை காட்டிய தாலிபன்கள்.. ஆப்கனில் மாறிய தேசிய கொடி.. போராடிய மக்கள் சுட்டுக்கொலை
காபூல் : ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை மாற்றக்கூடாது என்று தெருவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் மீது தாலிபன்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. மக்கள் பலர் தாலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள் தாலிபான் ஆட்சிக்கு எதிராக நாட்டுக்கு உள்ளேயே கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மக்கள் எதிர்ப்பு
தாலிபான்கள் அமைதியான ஆட்சியை கொடுப்போம், மக்கள் வீடுகளுக்கு செல்ல மாட்டோம், பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனாலும் அவர்களின் செயல்கள் நம்பும்படியாக இல்லாத காரணத்தால் மக்கள் அவர்களை எதிர்த்து வருகிறார்கள். அதோடு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மாற்றி உள்ளனர்.

போராடிய மக்கள்
அதேபோல்1919 ல் ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரம் கொண்டாடியதில் இருந்து , கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறமுடைய தேசியகொடியை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கொடிக்கு பதிலாக தங்களின் வெள்ளை கொடியை தாலிபான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் ஆட்சியின் கீழ் நாட்டின் புதிய கொடியாக தாலிபான்கள் வெள்ளை கொடியை முன்னிறுத்தி வருகிறார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

போராட்டம் அதிகரிப்பு
"எங்கள் கொடி, எங்கள் அடையாளம்," என்று கூறி ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள் காபூலில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறமுடைய தேசியக் கொடிகளை அசைத்தபடி மக்களுடன் கூட்டமாக போராடி வருகிறார்கள். தலைநகர் காபூலில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். காபூல் மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான குனாரின் தலைநகரான அசாதாபாத்தில், பேரணியின் போது சிலர் கொல்லப்பட்டனர், ஆனால் தலிபான் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது அது தூண்டப்பட்ட நெரிசலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று முகமது சலீம் என்பவர் கூறினார்.

பலர் கொலை
இதனிடையே ஜலாலாபாத் நகரத்திலும், பாக்டியா மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் தெருக்களில் மக்கள் இறங்கி போராடினார்கள். தலிபான் போராளிகள் ஜலாலாபாத்தில் கொடிகளுடன் சுற்றிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசதாபாத் மற்றும் மற்றொரு கிழக்கு நகரமான கோஸ்டில் இதே போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications