இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல்... வரும் 30-ம் தேதி வாக்கெடுப்பு
ஜெனீவா : சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30-வது கூட்டத்தில் திருத்தப்பட்ட வரைவு தீர்மானத்தை அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது.
அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் பங்கேற்புடன் உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம் மீது, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வரும் 30-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
போர்க்குற்ற புகார்களை இலங்கையின் நீதித்துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும், காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணை அமைப்பில் இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டுப்போரின் போது மனித உரிமைகளை நிலை நாட்டுபவர்கள், சிறு பான்மையினர், வழிபாட்டு தலங்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய தனி நபர்கள் குறித்தும், குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க தாக்கல் செய்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இறுதி தீர்மானம் வரும் 30-ந் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.